தந்தை பெரியார்-எம்.ஜி.ஆர். நினைவு தினம்
சென்னை: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 22வது நினைவு தினத்தையொட்டி சென்னை கடற்கரையில் உள்ள அவரது நினைவடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 22வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை அங்கு ஏராளமான அதிமுக நிர்வாகிகளுடன் வந்த கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்தினார்.
வைகோ:
இதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினரும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
எம்.ஜி.ஆர். குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
டி.ஆர், திருநாவுக்கரசர்:
அதே போல நினைவிடத்தில் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் ஆகியோரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழகம் முழுவதும்...
தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆங்காங்கு உள்ள எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல எம்.ஜி.ஆர் ரசிகர்களும், பக்தர்களும் படங்களை வைத்து மலர் மாலையிட்டு அஞ்சலி செலுத்தினர்.
பெரியார் நினைவு தினம்:
அதே போல இன்று தந்தை பெரியாரின் நினைவுநாளையொட்டி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.