ஜார்கண்ட்-முதல்வர் பதவி கோரி சிபு சோரன் பேரம்!

ஜார்கண்டில் நடந்துமுடிந்த சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை இடங்களை பிடிக்கவில்லை. 81 இடங்களைக் கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க குறைந்தபட்சமாக 41 இடங்கள் தேவை.
ஆனால், அதிகபட்சமான இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கூட்டணிக்கே 25 எம்.எல்.ஏ.க்கள் தான் கிடைத்துள்ளனர். அடுத்தபடியாக பா.ஜ.வுக்கு 20 இடங்கள் கிடைத்துள்ளன. மூன்றாவதாக சிபு சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 18 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ளது.
இந்நிலையில் காங்கரசோ அல்லது பா.ஜ.க.வோ மற்ற கட்சிகளை அரவணைத்து புது கூட்டணி அமைத்துத்தான் ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க ஐக்கிய ஜனதா தளம் தவிர வேறு முக்கிய கட்சிகள் தயாராக இல்லை. சுயேச்சைகளை மட்டுமே பா.ஜ வளைக்க முடியும்.
அப்படியே பலத்தை திரட்டினானும், மதச்சார்பற்ற கட்சிகள் என்ற முறையில் ஜார்கண்ட முக்தி மோர்ச்சா மற்றும் 5 இடங்களை கைப்பற்றியுள்ள லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள் ஒரணியில் திரண்டுவிடும்.
எனவே, கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரசுக்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் இணைவதில் காங்கிரசுக்கு பெரியளவில் சிக்கல் இருப்பதாக தெரியவில்லை.
ஆனால், காங்கிரசை ஆதரிக்க வேண்டுமானால், சிபு சோரனை முதல்வராக்க வேண்டும் என ஜார்கண்ட் முக்கி மோர்ச்சா முரண்டு பிடிக்க துவங்கியுள்ளது. இவர்களை சமாளிப்பதே காங்கிரசுக்கு பெரும் சவாலாக இருக்கும்.
ஏற்கனவே கொலை வழக்கில் சிக்கி பின்னர் விடுவிக்கப்பட்ட சிபுசோரன் மீது மேலும் பல கிரிமினல் மற்றும் ஊழல் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிபுசோரனை விட்டால், காங்கிரசுக்கு மற்றொரு வாய்ப்பு, ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா தலைவர் பாபுலால் மராண்டியை முதல்வர் பதவிக்காக முன்நிறுத்துவது. ஆனால் அவர் பா.ஜ பாசறையில் இருந்து வந்தவர் என்ற இமேஜ் இன்னமும் உள்ளது.
எனவே அவரின் தலைமைக்கு, மதச்சார்பற்ற கட்சிகள் முழு மனதுடன் எத்தனை நாளைக்கு ஒத்துழைப்பு தரும் என்ற தவிர்க்க முடியாத கேள்வி எழுகிறது.
ஆக ஜார்கண்டில் ஆட்சி அமைக்க சிபு சோரனின் ஆதரவு இருந்தால் தான் முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே காங்கிரசும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினருடன் பல்வேறு வியூகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. காங்கிரசுடன் பேரம் படியவில்லை என்றால், சிபு சோரனை அணுகலாம் என பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.
சிபுசோரன் யார் கழுத்தில் மாலை போடுவார் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். எப்படியானாலும், கடந்தமுறை போல மெகா சுரண்டல் சுயேச்சைகளை ஆட்சியில் அமரவைத்து பெரும் ஜார்கண்ட் மாநிலத்தை கொள்ளை போகவிடாமல் இருந்தால் சரி என நடுநிலையாளர்கள் எண்ணுகிறார்கள்.












Click it and Unblock the Notifications