தெலுங்கானா: 'அணு குண்டு' வெடிக்கும்- ராவ்
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநில அறிவிப்பிலிருந்து பின்வாங்கிய மத்திய அரசுக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்துவோம். மத்திய அரசைக் கண்டித்து ஆந்திராவில் பெரும் போராட்டம் வெடிக்கும், அணுகுண்டு வெடிப்புக்கு சமமானதாக அது இருக்கும் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார்.
வாரங்கல்லைச் சேர்ந்த பிரஜா ராஜ்ஜியம் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள், ஹைதராபாத்தில் ராவ் முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்தனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தெலுங்கானா மாநிலக் கோரிக்கையிலிருந்து மத்திய அரசு பின்வாங்கியது சரியல்ல.
நாக்குகளை வெட்டி வீசுவோம்:
அதேபோல ஹைதராபாத் தெலுங்கானாவின் ஒரு பகுதி இல்லை என்று யாராவது சொன்னால் அவர்களது நாக்குகளை நாங்கள் வெட்டி வீசுவோம்.
மாநிலத் தலைநகராக ஹைதராபாத் விளங்கினாலும் கூட இங்கு ஒரு ரயில் நிலையத்தைக் கூட கடலோரம் மற்றும் ராயலசீமாவைச் சேர்ந்த தலைவர்கள் கட்டவில்லை. ஹைதராபாத்தில் உள்ள அனைத்து வளர்ச்சிகளுமே நிஜாம் ஆட்சியாளர்கள் காலத்தில் உருவானவைதான்.
ஐக்கிய ஆந்திரா என்ற கோஷத்துடன் கிளம்பியுள்ளவர்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுடன் நாங்கள் நேரடி நடவடிக்கையில் ஈடுபட நேரிடும்.
கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளில் தெலுங்கானாவைப் புறக்ணித்து வந்துள்ளனர் ஆந்தித் தலைவர்கள்.
சினிமாக்காரர்கள் அரசியலுக்குள் நுழையக் கூடாது:.
தெலுங்கு சினிமாவில் எங்களை கேலி செய்யாமல் ஒரு படம் கூட வருவதில்லை. மோகன்பாபுவின் மகன் மனோஜ் குமாரின் திரைப்பட படப்பிடிப்பை தடுத்தது சரியான செயல்தான்.
இந்த தாக்குதலால் ஒரு நாள் படப்பிடிப்பு ரத்தாகி விட்டதே என்று பதறித் துடிக்கிறார் மோகன்பாபு. எங்களது மக்கள் வெறும் வயிற்றுடன் பல காலமாக தூங்கி வருகின்றனர். இவருக்கு ஒரு நாள் படப்பிடிப்பு ரத்தானால் என்ன குறைந்து போய் விடும்.?
சினிமாக்காரர்கள் அந்த வேலையோடு நின்று கொள்ள வேண்டும். அரசியலுக்குள் நுழையக் கூடாது. ஐக்கிய ஆந்திரா போராட்டத்துக்கு அவர்கள் ஆதரவு தெரிவிப்பதாக இருந்தால், கண்டிப்பாக பிரச்சினையை சந்தித்துதான் தீர வேண்டும்.
ஐக்கிய ஆந்திராதான் வேண்டும் என மோகன்பாபு கொடி பிடித்தால், அவரது படங்களையும், அவரது பிள்ளை படத்தையும் தெலுங்கானா மக்கள் ஏன் பார்க்க வேண்டும்?. தெலுங்கானா நடிகர்களின் படங்களை மட்டும்தான் நாங்கள் பார்ப்போம்.
ஹைதாராபாத் என்ன உங்கள் மாமன் வீட்டுச் சொத்தா என்று கேட்டுள்ளார் மோகன்பாபு. அதே கேள்வியை நான் அவரிடம் திருப்பிக் கேட்கிறேன், ஹைதராபாத் என்ன மோகன் பாபு மாமன் வீட்டுச் சொத்தா?.
லகடபதி ராஜகோபால் போராட்டம் குறித்து நான் பேசவே விரும்பவில்லை. அவர் சின்ன மீன். அவருக்கெல்லாம் பதில் பேசி என்னை தாழ்த்திக் கொள்ள நான் விரும்பவில்லை என்றார் ராவ்.