சிமி தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக மாறுகிறது கேரளா
கோழிக்கோடு: கடவுளின் சொர்க்கபுரி என கேரளாவைக் கூறுவார்கள் மலையாளிகள். ஆனால் தற்போது சிமி இயக்கத் தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக மாறி வருகிறது கேரளா என்று உளவுத்துறையினர் அபாய சங்கை ஊதியுள்ளனர்.
அந்த அளவுக்கு சிமி இயக்கத்தினரின் செயல்பாடுகள் கேரளாவில் பகிரங்கமாகவே நடக்க ஆரம்பித்துள்ளனவாம்.
சிமி எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் சப்தார் நகோரி தலைமையில்தான் கேரளாவில் சிமி இயக்கத்தினர் தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகின்றனராம்.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த தீவிரவாதி தடியன்டவிடே நசீர் (தற்போது கர்நாடக போலீஸ் காவலில் உள்ளார்) பாதுகாப்புப் படையினரிடம் அளித்த தகவலின்போது, சிமி இயக்கத்தின் முக்கியத் தலைவரான அப்துல் சுஹான் குரேஷி என்கிற தெளகீரை, கேரள மாநிலம் அலுவாவில் வைத்து கடந்த 2006ம் ஆண்டு சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
அகமதாபாத், டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தெளகீர் முக்கிய குற்றவாளி ஆவார். மேலும், தனக்கு சிமி இயக்கத்தைச் சேர்ந்த சதுலி, அன்சார்நத்வி ஆகிய இருவரையும் நன்கு தெரியும் என்றும் நசீர் கூறியுள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த 2008ம் ஆண்டு இந்தூரில் வைத்துக் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சதுலி என்பவர், சிமி இயக்கத் தலைவரான சிபிலியின் தம்பி ஆவார். சிபிலி, கடந்த 2007ம் ஆண்டு வகமோன் என்ற இடத்தில் தீவிரவாத பயிற்சி முகாமை நடத்தி வந்தவர் ஆவார்.
2007ம் ஆண்டு உஜ்ஜைன் நகரில் நடந்த சிமி இயக்கக் கூட்டத்தின்போது ஜிஹாதி பாதை குறித்து நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டு சிமி இயக்கத்தில் பிளவு ஏற்பட்டது.
இதையடுத்து தெளகீர், சிபிலி, எதஷாம் சித்திக்கி ஆகியோர் தனியாக பிரிந்து வந்து புதிய பிரிவை அமைத்தனர். இவர்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதே சிறந்தது என்ற கருத்தைக் கொண்டவர்கள். இதன் விளைவாக இவர்கள் உருவாக்கியதே இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு.
அதேசமயம், சைப் நச்சான், ஷாஹித் பாதர் பலாஹி, மிஸ்பா உல் இஸ்லாம் ஆகிய பிற சிமி தலைவர்கள் மிதவாதப் போக்கைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தார்கள்.
இந்தியன் முஜாஹிதன் தீவிரவாத அமைப்பு நாட்டின் பல பகுதிகளில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி ஏராளமான உயிர்களைப் பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பில் நாடு முழுவதும் ஏராளமான சிறு சிறு அமைப்புகள் உறுப்பினர்களாக உள்ளனவாம். இவர்களின் ஒட்டுமொத்த குறிக்கோள் - புரட்சி செய்வதுதான்.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கு வங்கதேசத்தின் ஹர்கத் உல் ஜிஹாதி இஸ்லாமி (ஹூஜி), பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா ஆகியவை உதவிகளைச் செய்து வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நசீர், சைனுதீன் ஆகியோருடன் இணைந்து தனது அமைப்புக்குத் தேவையான இளைஞர்களை சேர்த்து வந்தாராம் தெளகீர். பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டதன் மூலம் கேரளாவில் செயல்படும் ஜிஹாதி தீவிரவாதிகளிடையே ஹீரோ போல மதிக்கப்படுபவராம் இந்த நசீர்.
சைனுதீனுக்கு பைப் குண்டுகளைச் செய்யக் கற்றுக் கொடுத்தது இமாம் அலியாம்.
இப்படி சிமி இயக்கத்தினரின் செயல்பாடுகள் கேரளாவில் வலுத்து வருவது பாதுகாப்புப் படையினருக்கும், உளவுப் பிரிவினருக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.