புதுச்சேரியில் பயங்கரம்-ரவுடி வெட்டிக் கொலை
புதுச்சேரி: புதுச்சேரியில் பிரபல ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டார்.
புதுவை முதலியார் பேட்டை பூந்தோட்ட வீதியை சேர்ந்தவர் சுப்பு (50). ரியல் எஸ்டேட் அதிபர். சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன.
இன்று காலை சுப்பு டீ குடிப்பதற்காக மொபட்டில் வீட்டில் இருந்து வெளியே சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே சென்றபோது 5 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் வெடிகுண்டை வீசியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுப்புவை அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் அந்த கும்பல் சரமாரி வெட்டியது.
இதில் அவர் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
தகவல் கிடைத்ததும் முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுப்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகனும் ரவுடி...
கொல்லப்பட்ட சுப்புவுக்கு ஜெயக்குமார், துளசி, மணிகண்டன் என மூன்று மகன்கள். இவர்களில் மூத்த மகனான ஜெயக்குமாரும் ஒரு ரவுடியாவார்.
கடந்த 2004ம் ஆண்டு மார்ச் மாதம், சங்கர் என்ற ரவுடி தலைமையிலான ஒரு கும்பல், ஜெயக்குமாரை ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்தது.
உயிர் தப்பிக்க காவல் நிலையத்துக்குள் ஓடினார் ஜெயக்குமார். ஆனால் அங்கும் புகுந்த சங்கர் கும்பல் ஜெயக்குமாரை போலீஸார் கண் முன்பாகவே வெட்டிக் கொலை செய்தனர். இவரையும் வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும்தான் கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் துளசி, மணிகண்டன் சில மாதங்களுக்கு முன்பு, புதுவை நூறடி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த கும்பல் 2 பேர் மீதும் வெடிகுண்டு வீசியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக 2 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
அடுத்தடுத்து தனது மகன்களைக் கொல்ல சங்கர் கும்பல் முயன்றதால் அவர்களைப் பழி வாங்கக் காத்திருந்தாராம் சுப்பு. ஆனால் அதற்குள் முந்திக் கொண்ட ரவுடிக் கும்பல் சுப்புவை இன்று வெட்டிக் கொன்று விட்டது.
இந்தப் படுகொலையால் புதுவையில் பரபரப்பு ஏற்பட்டது.