For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒருமித்த கருத்து ஏற்பட்டால்தான் தெலுங்கானா மாநிலம் - ப.சிதம்பரம்

By Staff
Google Oneindia Tamil News

Chidambaram
டெல்லி: ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே தெலுங்கானா தனி மாநிலம் குறித்த நடவடிக்கைளை மேற்கொள்ள முடியும். அதுவரை தெலுங்கானா காத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசும், காங்கிரஸும் துரோகம் இழைத்து விட்டன என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.

ஆந்திராவின் கடலோரப் பகுதிகள் மற்றும் ராயலசீமா ஆகிய பிராந்தியங்களைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்கள் கொடுத்த கடும் நெருக்கடியைத் தொடர்ந்து, தெலுங்கானா விவகாரத்தை கிடப்பில் போட மத்திய அரசு முடிவு செய்தது.

ஒருமித்த கருத்து அவசியம்...

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆந்திராவில் நிலைமை மாறியுள்ளது. தெலுங்கானா பிரச்சினை காரணமாக ஏராளமான கட்சிகள் பிளவுபட்டுள்ளன. அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது அவசியமாகும்.

சம்பந்தப்பட்ட அனைவரையும் அழைத்து இதுகுறித்து பேசி சுமூக முடிவை எட்ட முயற்சிக்கப்படும் என்றார் ப.சிதம்பரம்.

மத்திய அரசின் இந்த முடிவு தெலுங்கானா பகுதியில் மீண்டும் பதட்டத்தையும் போராட்டத்தையும் தூண்டி விட்டுள்ளது.

48 மணி நேர பந்த்துக்கு அழைப்பு...

மத்திய அரசு துரோகம் செய்து விட்டது என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும், தெலுங்கானா போராட்டத்தை தீவிரமாக நடத்திய உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும் கடுமையாக சாடியுள்ளனர்.

மேலும் 48 மணி நேர பந்த் போராட்டத்துக்கு மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த அனைத்து எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும், மக்கள் பிரதிநிதிகளும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். பஞ்சாயத்து தலைவர்கள் உள்பட அனைவருமே விலக வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

வன்முறை வெடித்தது..

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து தெலுங்கானா பிராந்தியத்தில் மீண்டும் வன்முறை, போராட்டங்கள் வெடித்துள்ளன.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த ஒருவரும், ஒரு பேராசிரியரும் மாரடைப்பு வந்து இறந்தனர்.

நிஜாமாபாத் மாவட்டம், கமாரெட்டி நகரில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் தனது நாக்கு மற்றும் காதுகளை வெட்டிக் கொண்டார். தீக்குளிக்கவும் அவர் முயற்சித்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் தடுத்து நிறுத்தினர்.

ஒரு அரசுப் பேருந்தும், தொலைபேசி நிலையமும் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X