பத்திரப்பதிவு: வழிகாட்டு மதிப்பு மாற்றப்படுகிறது!
சென்னை: நிலத்தைப் பதிவு செய்யும் போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் வழிகாட்டு மதிப்பை மாற்றி அமைக்க உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
இதற்கென தனி குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலத்துக்கு வழிகாட்டு மதிப்பெல்லாம் கிடையாது. வாங்குபவரும் விற்பவரும் லோக்கல் அலுவலர்களை கையில் போட்டுக் கொண்டு தங்களிஷ்டப்படி விலை நிர்ணயித்து கட்டணத்தை குறைவாகச் செலுத்தி வந்தனர்.
பின்னர் அரசு தலையிட்டு, இடம் அல்லது வீட்டைப் பதிவு செய்யும் போது அதன் மதிப்பை அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டு மதிப்பு அடிப்படையில் கணக்கிட்டு கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தது.
அரசு இதன் மூலம் பெருமளவு வருவாய் கிட்டி வருகிறது. இதனால் கடந்த 2005-2006-ம் ஆண்டில் ரூ.2348.64 கோடியாக இருந்த பதிவுத்துறை வருவாய், 2007-08-ம் ஆண்டில் ரூ.4232.36 கோடியாக அதிகரித்தது. ஆனால் அது 2008-09-ம் ஆண்டில் ரூ.4099 கோடியாக குறைந்தது. உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக ரபியல் எஸ்டேட் துறை வீழ்ச்சியடைந்ததால் வந்த நிலை இது. ஆனாலும் இந்த ஆண்டில் இது அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
வழிகாட்டி மதிப்பு முறையை எளிதாக்கும் பொருட்டு, கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து வழிகாட்டி மதிப்பு முறையை அரசு மாற்றியமைத்தது.
அதற்கு முன்பு, தெருவாரியாக நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டு மதிப்பு, இப்போது குறிப்பிட்ட ஏரியா வாரியாக கணக்கிடப்படுகிறது.
அதாவது வணிகப்பகுதி, குடியிருப்புப் பகுதி, விவசாய பகுதி, மிகவும் பின்தங்கிய பகுதி என நிலத்தினை பிரித்து பல்வேறு உட்பிரிவுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கடந்த ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பும் சில இடங்களில் சரியாக இல்லையாம்.
சில குறிப்பிட்ட இடங்களில் சந்தை மதிப்பை விட வழிகாட்டு மதிப்பு அதிகமாக உள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதே பிரச்சினை விவசாய நிலங்கள் மதிப்பீட்டிலும் எழுந்துள்ளது.
பாசனப்பகுதி நிலத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே, நீர்ப்பாசன வசதி இல்லாத நிலத்துக்கும் விதிக்கப்பட்டதாக விவசாயிகள் புகார் கூறினர்.
இதனைத் தவிர்க்கும் பொருட்டு, தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை, வழிகாட்டி மதிப்பினை மாற்றியமைக்க முடிவுசெய்துள்ளது. இதற்காக ஒரு உயர்மட்ட குழுவை பத்திரப்பதிவுத்துறை அமைத்துள்ளது. அதில், பத்திரப்பதிவுத்துறை தலைவர், கூடுதல் பதிவுத்துறை தலைவர் (ஏ.ஐ.ஜி.), துணைத் தலைவர்கள் (டி.ஐ.ஜி.), சார் பதிவாளர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.
இந்த குழுவினர், தமிழகத்தின் உள்ள ஒவ்வொரு சிறு பகுதியையும் ஆராய்ந்து, புதிய வழிகாட்டி மதிப்பை உருவாக்குவார்கள், என தமிழக அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications