திருவாரூரில் புதிய மருத்துவக் கல்லூரி - அமைச்சர் தகவல்
திருவாரூர்: திருவாரூர் புதிய மருத்துவக்கல்லூரி கட்டிடத்தை மார்ச் மாதம் முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. 300 படுக்கை அறை கட்டிடம் மற்றும் விடுதி கட்டிடப் பணிகள் வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவடையும்.
முதல் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தேவையான கட்டிடம் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும்.
புதிய மருத்துவக் கல்லூரியை மார்ச் மாதம் முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார். எனவே, மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு வரும் கல்வியாண்டில் மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டு செயல்படும் என்றார்.