தாயை பிரிந்த குழந்தைகளுக்கு ரூ. 2 லட்சம் நிதி உதவி - கருணாநிதி உத்தரவு
மதுரை: மதுரை மாவட்டம் ஆலம்பட்டி கிராமத்தில் கிணற்றில் விழுந்து இறந்துபோன பெண்ணின் இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தலா 1 லட்சம் ரூபாய் வீதம் 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
மதுரை மாவட்டம், மேலவளவு அருகில் உள்ள ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தூரான் .
இவரது மகளும், நாகராஜன் என்பவரின் மனைவியுமான தேன்மொழி கிணற்றில் குளிக்கச் சென்ற போது தவறி விழுந்து இறந்து விட்டார்.
அவர் இறந்ததும், மனைவியுடன் வாழ்ந்து வந்த கணவர் நாகராஜன் தமது சொந்த ஊர் சென்றுவிட்டார்.
இதனால், இறந்துபோன தேன்மொழியின் குழந்தைகளான பவதாரிணி (3), அன்புராஜ் (2) ஆகிய இருவரும் தற்போது தேன்மொழியின் தந்தை செந்தூரான் என்பவரின் பராமரிப்பில் உள்ளனர்.
செந்தூரான் விவசாயக் கூலி வேலைகள் செய்துவருவதால் தமது பேரக் குழந்தைகளைப் பராமரிக்க இயலாத நிலையில் மிகவும் சிரமப்படுவதாகவும், குழந்தைகளை வளர்ப்பதற்காக அவருக்கு நிதியுதவி வழங்கலாம் என்றும், மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரி பரிந்துரை செய்துள்ளார்.
இந்த கோரிக்கை ஏற்று தாயை இழந்து தவிக்கும் இரண்டு குழந்தைகளின் பராமரிப்புக்காக அவர்கள் இருவருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் வீதம் 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிதியை வங்கியில் டெபாசிட் செய்து, அதன்மூலம் வரும் வட்டியைக் கொண்டு அந்த குழந்தைகளை வளர்த்து ஆளாக்கலாம் என்றும் முதலமைச்சர் கருணாநிதி அந்த ஆணையில் குறிப்பிட்டுள்ளார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.