கழிவறை வசதி கூட இல்லாத அவலத்தில் 'மறு குடியமர்த்தப்பட்ட' தமிழர்கள்!
கொழும்பு: இலங்கை முள்வேலி முகாம்களில் இருந்த தமிழர்களை சொந்த இடங்களில் குடியமர்த்தி வருவதாக இலங்கை அரசு கூறினாலும் ஏராளமான தமிழர்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி தவித்து வருகின்றனர்.
இலங்கை அரசு தெரிவித்துள்ள தகவலின் படி, கடந்த புதன்கிழமை வரை முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 352 தமிழர்களை அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இன்னும், ஒரு லட்சத்து 40 ஆயிரம் தமிழர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
போருக்கு முன்பு தாங்கள் வசித்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள தமிழர்கள், பலர் தங்கள் வீடுகள் இடிந்து சின்னா பின்னமாகி, விவசாய நிலங்கள் கருகிக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்திற்கு திரும்பிய முத்தையா சிவயோகநாதன் என்பவர் தன்னுடைய வீடு அங்கிருந்ததற்கு அடையாளமாக எஞ்சியிருக்கும் ஒரேயொரு மரப்பலகையை வெறித்துப் பார்த்துக் கொண்டு,
'குடிநீர், கழிவறை வசதிகள் எதுவுமில்லை. பின்னால் காட்டுப்பக்கம் எதாவது தண்ணீர் கிடைக்குமா என பார்க்க வேண்டும். விவசாயத்தை பழையபடி தொடர என்னிடம் சுத்தமாக பணம் கிடையாது. என்ன செய்வது என்று தெரியவில்லை' என்றார்.
அரசு உதவி செய்யவில்லையா என்றதற்கு, 'முறைப்படி எல்லாம் செய்கிற வரைக்கும் தற்காலிகமாக நீங்களே வீடு கட்டிக் கொள்ளுங்கள் என அரசாங்க அதிகாரிகள் சொல்லி விட்டார்கள்' என்றார்.
குளிக்கவும், இயற்கை உபாதைகளுக்காகவும் வேறு வழியின்றி காட்டுப்பகுதிகளுக்கு செல்லும் பலரை பாம்பு கடித்து விட்டதாகவும் அவர்கள் கூறினர். இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் பெரும் அசவுகரியத்துக்கு ஆளாகியுள்ளனர்.
'வீட்டில் ஆண்கள், குறிப்பாக வாலிப வயதில் இருந்தால் அவர்கள் விடுதலைப் புலிகளின் ஆள் என்று பிடித்து வைத்திருக்கிறார்கள். இங்கு வந்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்களும், சின்ன குழந்தைகளும் தான்.
ஏதாவது கூடாரம் அமைக்கலாம் என்றாலும் எங்களால் முடியவில்லை' என்று பாம்பு கடித்து சிகிச்சை பெற்று வரும் ஒரு மூதாட்டியின் கணவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், 'யார் தீவிரவாதம் செய்தார்களோ அவர்களை அரசாங்கம் தண்டிக்க வேண்டும். அதை விட்டுட்டு எல்லா தமிழர்களையும் தண்டிச்சா என்னய்யா நியாயம்' என்றார்.
இன்னும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நிலை இவ்வாறு தான் உள்ளது.












Click it and Unblock the Notifications