ருசிகா வழக்கை மாஜி டிஜிபி ரத்தோர் சிதறடிக்க நான் உதவவில்லை - செளதாலா
சண்டிகர்: ஹரியானாவைச் சேர்ந்த சிறுமி ருசிகாவை பாலியல் பலாத்காரம் செய்து, அவர் தற்கொலை செய்து கொள்ளக் காரணமாக இருந்த முன்னாள் டிஜிபி எஸ்.பி.எஸ். ரத்தோருக்கு நான் பதவி உயர்வு அளிக்கவில்லை, வழக்கை சீர்குலைக்க நான் அவருக்கு உதவவில்லை என்று முன்னாள் ஹரியானா முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலா கூறியுள்ளார்.
ரத்தோர் இந்த வழக்கை சீர்குலைக்கவும், ருசிகாவின் குடும்பத்தினரை மிரட்டவும், செளதாலா உதவியாக இருந்தார் என்று மிகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், ரத்தோருக்கு பதவி உயர்வும் செளதாலா அளித்து அவரைக் காத்தார் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் இதை செளதாலா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ரத்தோருக்கு பதவி உயர்வு அளித்தது தொடர்பாக எனது அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையில் நான் ரத்தோருக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை. முன்னாள் முதல்வர் பன்சிலால்தான் ரத்தோரை டிஜிபியாக உயர்த்தினார்.
ரத்தோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதை எனது அரசு உறுதி செய்தது என்று கூறியுள்ளார் செளதாலா.