ஆளுங்கட்சிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை அதிமுகவால் - திருமாவளவன்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அண்மையில் நடந்து முடிந்த திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் தி.மு.க. அரசின் சாதனைகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.
குறிப்பாக, ஏழை எளிய மக்கள் பயன்பெற தக்க வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள புதிய திட்டமான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இது போன்ற மக்கள் நலத்திட்டங்களுக்கு தமிழக மக்கள் அளித்துள்ள பாராட்டு சான்றிதழ் தான் இந்த வெற்றி.
ஆளும் கட்சிக்கு ஈடுகொடுத்து செயல்படவோ, ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைக்கவோ வலிமை பெற்ற கட்சியாக அ.தி.மு.க. செயல்படவில்லை என்பதை தான் இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்வதிலும், பொதுமக்களின் நன்மதிப்பை வென்றெடுத்தும் வெற்றிகளை குவிப்பதில் கலைஞருக்கு நிகர் கலைஞர்தான் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இந்த வெற்றியால் கூட்டணி கட்சி என்கிற முறையில் விடுதலைச் சிறுத்தைகளும் பெரும் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறியுள்ளார் திருமா.