இடைத் தேர்தல் தேதியை மாற்ற தா.பா-திருமா கோரிக்கை
மதுரை: பென்னாகரம் இடைத்தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தல் ஜனவரி 20 ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் நெல் அறுவடை ஆகும் காலம். மறு சாகுபடிக்காக நிலத்தை பண்படுத்தும் வேலையும் நடைபெறும்.
மேலும், தமிழர்களின் திருநாளான பொங்கல் திருநாள் ஜனவரி மாதம் 14 ம் தேதி முதல் 17 ம் தேதி வரை வருவதால் அதற்கான வேலைகள் உள்ளது. இவற்றை கணக்கில் கொண்டு பென்னாகரம் இடைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்,
பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி, பென்னாகரம் இடைத்தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே, ஜனவரியில் தொடங்கவுள்ள சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்தவுடன் இடைத் தேர்தலை நடத்தினால் நன்மை பயக்கும். எனவே தேர்தல் கமிஷன் தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அதிமுக, பாமக, மதிமுக ஆகியவையும் இதே கோரிக்கையை வைத்தன. முதல்வர் கருணாநிதியோ இதுகுறித்து எங்களிடம் தேர்தல் ஆணையம் எந்த ஆலோசனையும் கேட்கவில்லை. அவர்களை மதிக்கிறோம், அவர்கள் சொல்படி நடப்போம் என்று கூறி விட்டார்.
தொடர்ந்து தேர்தலை வேறு தேதியில் வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் திட்டமிட்டபடி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே விளக்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்தது.












Click it and Unblock the Notifications