துப்பாக்கியுடன் வந்து மனைவி, குழந்தையை கொன்றதாக கூறிய நீதிபதி - உயர்நீதிமன்றத்தில் போலீஸ் புகார்
சென்னை: குடிபோதையில் சென்னை ஓட்டேரி காவல் நிலையத்திற்கு கையில் இரு ரிவால்வர்களுடன் வந்த நீதிபதி ஒருவர், தனது மனைவி மற்றும் மகனை சுட்டுக் கொன்று விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதுகுறித்து உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு போலீஸ் தரப்பிலிருந்து புகார் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த நீதிபதி திருச்சி அருகே உள்ள ஒரு கோர்ட்டில் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை ஓட்டேரியில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்தார்.
நல்ல குடிபோதையில் இருந்த நீதிபதியின் கைகளில் இரு ரிவால்வர்கள் இருந்தன. அங்கிருந்த போலீஸாரிடம், நான் எனது மனைவி மற்றும் மகனை சுட்டுக் கொன்று விட்டேன் என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார், அந்த நீதிபதியை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனார்கள். ஆனால் அங்கு நீதிபதியின் மனைவியும், மகனும் உயிருடன்தான் இருந்தனர்.
இதையடுத்து நீதிபதியை வீட்டிலேயே விட்டு விட்டு போலீஸார் திரும்பி விட்டனர்.
நீதிபதிகள் மீது போலீஸார் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க முடியாது. உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற்றபின்னர்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நீதிபதியின் செயல் குறித்து விளக்கி புளியந்தோப்பு துணை ஆணையர், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நீதிபதி கொண்டு வந்த இரு ரிவால்வர்களும் அவரிடமிருந்து மீட்கப்பட்டு போலீஸார் வசம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை காவல்துறை ஆணையர் அலுவலக வட்டாரத்தில் கூறுகையில், நடைமுறைப்படி உயர்நீதிமன்றப் பதிவாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம். உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன்தான் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
உயர்நீதிமன்றத் தரப்பில் கூறுகையில், சம்பந்தப்பட்ட நீதிபதி மீது துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்படக் கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
நீதிபதி கையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் அவருக்கு சொந்தமானது இல்லை என்று தெரிகிறது. அவை, அந்த நீதிபதியின் கோர்ட்டில் வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டவையாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
இந்தத் துப்பாக்கிகள் காணாமல் போனதாக சம்பந்தப்பட்ட கோர்ட்டின் தலைமை கிளர்க் போலீஸில் புகார் கொடுத்தால் பிரச்சினை பெரிதாகி விடும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications