பென்னாகரம் இடைத்தேர்தல் தேதியில் மாற்றம் இல்லை- தேர்தல் கமிஷன்
சென்னை: பொங்கல் பண்டிகையை கவனத்தில் கொண்டே பென்னாகரம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்தோம். எனவே தேதியை மாற்ற முடியாது என்று தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியின் திமுக எம்எல்ஏ பெரியண்ணன் மறைவயடுத்து அங்கு ஜனவரி 20ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
பொங்கல் நேரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை வரும் என்பதாலும், பொங்கல் பண்டிகையின்போது தமிழர்கள் அதை ஒற்றுமையாகக் கொண்டாடாமல் தேர்தலில் எதிரெதிர் களத்தில் நிற்க வேண்டிய நிலை வரும் என்பதாலும் இந்த இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோரும் தேதியை மாற்றக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைத்தனர்.
ஆனால், பென்னாகரம் இடைத்தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், தேதியை மாற்ற வாய்ப்பில்லை என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை உள்பட அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்ட பிறகே, தேர்தல் தேதியை அறிவித்ததாக ஆணையம் கூறியுள்ளது.