தெலுங்கானா போராட்டத்தில் நக்சல்களும் களமிறங்குகிறார்கள்
ஹைதராபாத்: தெலுங்கானா கட்சிகளுக்கு ஆதரவாக நக்சலைட்டுகளும் களமிறங்க முன்வந்துள்ளனர். தனி மாநில கோரிக்கையை வென்றெடுக்க காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக எல்லோரும் ஒன்றிணைந்து யத்தம் நடத்தலாம் என அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆசாத் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'தனி தெலுங்கானா என்பது இப்பகுதியில் உள்ள 4 கோடி மக்களின் மறுக்க முடியாத உரிமை. இந்த உரிமையை வழங்க மறுக்கும் பாசிச காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்தும், அவர்கள் நமக்கிழைத்த துரோகத்தை எதிர்த்தும் முழுவீச்சில் போராடுவோம்.
தனி தெலுங்கானாவை வென்றெடுக்க மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அரசுக்கு எதிரான யுத்த போராட்டத்தை நடத்துவோம்.
காங்கிரஸ், பா.ஜ.க, தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எல்லோருமே ஓட்டுக்காக மட்டுமே தெலுங்கானா ஆதரவாளர்கள் போல நடிப்பபார்கள். அவர்களை நம்பாதீர்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கெடுவை கண்டுகொள்ளாத காங்கிரஸ்:
இதற்கிடையே, 'திங்கள்கிழமை (நாளை) மாலைக்குள் தெலுங்கானா தனி மாநிலம் எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து உறுதியாக மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அன்று மாலை முதல் காலவரையற்ற பந்த் போராட்டத்தைத் தொடங்குவோம்' என்று தெலுங்கானா போராட்ட கூட்டு நடவடிக்கைக் குழு மத்திய அரசுக்கு கெடு விதித்தது.
ஆனால், 2000ம் ஆண்டில் மத்தியப் பிரதேச அரசு செய்ததை போல ஆந்திர சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினால் தான் தெலுங்கானாவை பிரிக்க முடியும் என தற்போது காங்கிரஸ் புது 'கரடி'யை விட்டுள்ளது.
நேற்று டி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகரராவ் மத்திய அரசுக்கு கெடு விதித்து சூடாக பேட்டியளித்ததை அடுத்து, மத்திய அரசு தங்களுக்கு சாதகமான முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும் என தெலுங்கானா ஆதரவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், இன்று போபாலில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் இதுபற்றி நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில், 'மத்தியப் பிரதேசத்தில் இருந்து கடந்த 2000ம் ஆண்டில் சட்டிஸ்கர் பிரிக்கப்பட்டபோது, அம்மாநில சட்டசபையில் அவ்விஷயம் தொடர்பாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல, ஆந்திராவிலும் சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் கொண்டு வந்தால்தான் தெலுங்கானா பகுதியை தனி மாநிலமாக அறிவிக்க முடியும்.
இப்பிரச்னையில் ஆந்திர அரசியல்வாதிகளின் போக்கு விசித்திரமாக உள்ளது. தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் போன்றவர்கள் முதலில் தனி தெலுங்கானாவுக்கு ஆதரவாக பேசினார்கள். பின்பு அவர்கள் எதிர்க்கிறார்கள்.
கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டியது மாநில முதல்வர் ரோசய்யாவின் பொறுப்பு' எனக் கூறியுள்ளார்.
தெலுங்கானா ஆதரவாளர்கள் இறுதி முடிவிற்கு நாளை வரை கெடு விதித்துள்ள நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர், பொறுப்பை ரோசய்யாவிடம் தள்ளிவிடுவது தெலுங்கானா கட்சியினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.