துறைத் தேர்வு எழுத வந்த அரசு ஊழியர் திடீர் மரணம்
ஈரோடு: பதவி உயர்வுக்காக தேர்வு எழுத வந்த வன ஊழியர், தேர்வு மையத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வேலுமணி நகரைச் சேர்ந்தவர் பரமசிவம் (55). இவர் கோபி மூங்கில் கோட்டம் கடம்பூர் வனப்பகுதியில் வனத்துறை ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
அரசு ஊழியரான இவர், பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார். இதற்காக ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு மையத்திற்கு வந்தார்.
தேர்வு நடைபெறும் அறையின் அருகில் வந்த போது திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், வழியிலேயே பரமசிவம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன பரமசிவத்திற்கு பூங்கொடி என்ற மனைவியும், பிரகாஷ், கோகுல் என்ற 2 மகன்களும் உள்ளனர்.