டெல்லி: ஏர் இந்தியா விமானம் மீது 'கல்வீச்சு'!!
டெல்லி தொடர்ந்து பரபரப்பு செய்திகளை வழங்கி வருகிறது. டெல்லி சாலைகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவன பஸ்கள் தொடர்ந்து எரிந்து ஒருபக்கம் புகையைக் கிளப்பி வருகிறது. இதையடுத்து டெல்லி பெரோஸ்ஷோ கோட்லா மைதான பிட்ச் அபாயகரமானதாக மாறி வீரர்களை மிரட்டி போட்டியை கைவிட வைத்தது.
இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தி்ல ஏர் இந்தியா விமானம் மீது கல் வந்து விழுந்த சம்பவம் புது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மும்பை இடையிலான ஏர் இந்தியா விமானம் நேற்று மாலை 5 மணிக்குக் கிளம்பத் தயாராக இருந்தது.
அப்போது அந்த விமானத்திற்கு முன்பாக ஒரு ஜெட் ஏர்வேஸ் விமானம் கிளம்பிச் சென்றது. விமானம் கிளம்பியபோது தரையில் கிடந்த ஒரு கல் தெரித்து ஏர் இந்தியா விமானத்தின் ஜன்னல் கண்ணாடி மீது பட்டு கண்ணாடி உடைந்தது.
அப்போது விமானத்தில் 162 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். கல் வந்து விழுந்து கண்ணாடி ஜன்னல் உடைந்ததைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமானத்தை பார்க்கிங் பகுதிக்குக் கொண்டு சென்றனர். பின்னர் பயணிகளை இறக்கினர். பிறகு அந்த விமானம் பழுது பார்க்கும் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இறக்கி விடப்பட்ட பயணிகள் வேறு விமானத்தில் ஏற்றி மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜெட் ஏர்வேஸ் விமானனின் என்ஜின் இயங்கத் தொடங்கியபோது அதிலிருந்து வெளியேறிய அழுத்தம் கொண்ட புகையில் தரையில் கிடந்த கற்கள், தூசிகள் படு வேகமாக மேலே கிளம்பின. அப்படி கிளம்பியபோது ஒரு கல் வந்து விழுந்ததில்தான் ஏர் இந்தியாவின் ஜன்னல் கண்ணாடி உடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானங்கள் புறப்படுவதற்கு முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் டாக்ஸிவே பகுதியில் தரை சுத்தமாக வைத்துக் கொள்ளப்படாததே இந்த சம்பவத்திற்குக் காரணம். அங்கு ஏராளமான சிறு சிறு கற்கள் கிடக்கின்றன. மேலும், அருகில் நடக்கும் கட்டுமானப் பணிகளால் எழும்பும் தூசிகளும் இங்கு வந்து அடைந்து கிடக்கின்றன.
மகா மோசமான முறையில் டாக்ஸிவே பகுதியை பராமரித்து வருவது இந்த சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் ஒரு விமானத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால் சர்ச்சையையும் எழுப்பியுள்ளது.
இது மிகவும் சீரியஸான விஷயம். ஒருவேளை அந்தக் கல் பயணியின் மீது பட்டிருந்தால் நிச்சயம் உயிரிழப்பே ஏற்பட்டிருக்கும். அவ்வளவு அதி வேகமாக அந்தக் கல் வந்து மோதியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் கூட இதுபோல நடந்துள்ளது. வெறும் கல் மட்டுமல்லாமல் டிராலிகள், பயணிகள் ஏற உதவும் ஏணிகள் ஆகியவை கூட பறந்து போயுள்ளன. ஆனால் கல் வீச்சில் விமானத்தின் கண்ணாடி உடைந்தது இதுவே முதல் முறையாகும் என்று விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து டெல்லி விமான நிலைய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், முதல் கட்ட விசாரணையில், ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் விமானி அதிக அழுத்தத்துடன் என்ஜினை ஸ்டார்ட் செய்ததால்தான் கல் தூக்கி எறியப்பட்டு ஏர் இந்தியா விமானத்தின் மீது பட்டதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.