ரத்தோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு தொடர மறுத்த சிபிஐ!

ருசிகா வழக்கை ஆர்.எம்.சிங்தான் விசாரித்தார். அப்போது அவர் சிபிஐ இணை இயக்குநராக இருந்தார்.
ருசிகா வழக்கில் ரத்தோருக்கு மிகக் குறைந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து அவர் கூறுகையில், ருசிகா வழக்கு விசாரணையில் குறுக்கிட்டு அதை சீர்குலைக்கப் பார்த்தார் ரத்தோர்.
ருசிகா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ரத்தோர் சிக்கிய 3 வருடங்களில், ருசிகா தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அவர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என நான் பரி்ந்துரைத்தேன். ஆனால் மேலதிகாரிகள் அதை ஏற்கவில்லை.
இந்த சமயத்தில், ரத்தோர் பல வழிகளிலும் எனது விசாரணையை குலைக்க முயன்றார். எனது அலுவலகத்திற்கு பலமுறை வந்து பேசினார். போனில் அழைத்துப் பேசினார். எனது வீட்டுக்கும் கூட வந்து பேசியுள்ளார். என்னை தனது வழிக்குக் கொண்டு வர அவர் முயன்றார். ருசிகா வழக்கு குறித்த கோப்பு என்னிடம் வந்தபோது என்னைத் தேடி வந்து வழக்கு விசாரணையை முடக்க அவர் முயன்றார்.
முதலில் லஞ்சம் கொடுக்க முயற்சித்தார், பிறகு மிரட்டிப் பார்த்தார். நான் எதற்கும் பணியவில்லை. மாறாக, இனிமேல் என்னைத் தேடி வரக் கூடாது என்று திட்டவட்டமாக கூறினேன்.
இதனால் கோபமடைந்த அவர் சிபிஐ இயக்குநரை அணுகி, என்னிடம் சிங் லஞ்சம் கேட்கிறார். பணம் கொடுத்தால் உங்களுக்கு சாதகமாக வழக்கை மாற்றி விடுகிறேன் என்று கூறுகிறார் என்று பொய்யான புகாரைக் கூறினார்.
இதையடுத்து என்னை அழைத்த இயக்குநர், உங்கள் மீது ரத்தோர் புகார் கூறியுள்ளார். எனவே இனிமேல் அந்த வழக்கை நீங்கள் பார்க்க வேண்டாம் என்று கூறி விட்டார்.
இதைக் கேட்டு நான் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தேன். இதுகுறித்து அவரிடம் நான் விளக்கம் கேட்டபோது, உங்களுக்கு எதிரான ஆடியோ டேப் தன்னிடம் இருப்பதாக ரத்தோர் கூறுவதாக தெரிவித்தார். அப்படியானால் ரத்தோரை வரவழைத்து அவர் கூறும் ஆடியோ டேப்பை போட்டுக் கேளுங்கள் என்று கூறினேன்.
ஆனால் இயக்குநர் அதைச் செய்யவில்லை. மாறாக எனது கோரிக்கையை நிராகரித்து விட்டு வழக்கிலிருந்து நீக்கி விட்டார்.
ரத்தோர்தான் ருசிகாவின் தற்கொலைக்குக் காரணம். அதற்குரிய வலுவான ஆதாரங்கள் இருந்தபோதும் சிபிஐ அதை பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டது.
சிபிஐ வட்டத்திற்குள் இருந்த சிலர், ரத்தோருக்கு சாதகமாக செயல்பட்டதால்தான் அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு தொடரப்படவில்லை.
ரத்தோர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதிவு செய்ய நீதிமன்றங்கள் ஆர்வத்துடன் இருந்தன. ஆனால் சிபிஐ அப்படிச் செய்யத் தவறி விட்டது.
ரத்தோருக்கு எதிரான அத்தனை சாட்சியங்களும், ஆதாரங்களும் இருந்தபோதிலும் அதை புறக்கணித்து விட்டது சிபிஐ. அந்த வழக்கு தொடரப்பட்டிருந்தால் ரத்தோருக்குக் கடுமையான தண்டனை கிடைத்திருக்கும்.
ரத்தோர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், தற்கொலைக்குத் தூண்டியதாக நான் பரி்ந்துரைத்த குற்றச்சாட்டு இடம் பெறவில்லை என்பதை பின்னர் அறிந்து கொண்டேன் என்றார் சிங்.
சிங் இணை இயக்குநராக இருந்தபோது சிபிஐ இயக்குநராக இருந்தவர் ஆர்.கே.ராகவன். ஆனால் சிபிஐ மீதும், ராகவன் மீதும் சிங் சுமத்தியுள்ள இந்த கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ராகவன் பதிலளிக்க மறுத்து விட்டார்.
இதுகுறித்து ராகவன் கூறுகையில், எந்தப் புகாருக்கும் இடமில்லை. பத்து வருடத்திற்கு முன்பு நடந்தது குறித்து இப்போது கருத்து கூற முடியாது. எனக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது என்றார்.
ரத்தோர் கொடுத்த அழுத்தத்தால் ருசிகாவை நீக்கிய பள்ளி...
முன்னதாக ருசிகா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி ருசிகாவை பள்ளியிலிருந்து நீக்கியது நிர்வாகம். ஆனால் தற்போது பள்ளி நிர்வாகத்தின் செயல் குறித்து அதன் ஆசிரியை வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,ரத்தோர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே ருசிகாவை பள்ளியிலிருந்து நிர்வாகம் தவறான குற்றச்சாட்டைக் கூறி நீக்கியது.
ஆனால் நான் அப்போது ஒரு சாதாரண ஆசிரியை. என்னால் பள்ளி நிர்வாகத்தை கேள்வி கேட்க முடியாது. மிகச் சிறந்த மாணவியாக, வளரும் டென்னிஸ் வீராங்கனையாக இருந்த ருசிகாவை அபாண்டமான பழியை சுமத்தி நீக்கினர்.
ரத்தோர் மற்றும் போலீஸார் கொடுத்த நெருக்கடியே அதற்குக் காரணம். அன்று மட்டுமல்லாமல் இன்று வரை அரசியல் மற்றும் காவல்துறையின் ஆதிக்கமே மேலோங்கி உள்ளது. இதனால் வருங்காலத் தலைமுறையினர் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதை நினைத்து எனக்கு வேதனையாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications