'பிட்ச்' குழப்பம்- 'டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ஜெட்லி விலக வேண்டும்'!

பெரோஸ்ஷா கோட்லா மைதான பிட்ச் நேற்று மிகவும் மோசமானதாக மாறியது. இதனால் பந்து எந்த திசையில் போகிறது என்பதே தெரியாமல் தாறுமாறாக ஓடியது. இதில் வீரர்கள் திணறிப் போனார்கள். தில்ஷானுக்கு அடிபட்டு விட்டது.
தொடர்ந்து விளையாடினால் உயிருக்கு ஆபத்து என்பதால் போட்டி அப்படியே நிறுத்தப்பட்டு கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் கொந்தளி்த்த ரசிகர்கள் பெரும் அமளியில் இறங்கினர். இருக்கைகளை உடைத்து நாசப்படுத்தினர். இந்த சம்பவத்தால் சர்வதேச கிரிக்கெட் மைதானமான பெரோஸ்ஷா கோட்லாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துக் கொண்டு அரசியலாக்கியுள்ளது. இதற்குக் காரணம், ராஜ்யசபா பாஜக தலைவர் அருண் ஜெட்லி, டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக இருப்பதே.
நேற்று மேட்ச் பார்ப்பதற்காக தனது ஆதரவாளர்கள் புடை சூழ, கோர்ட், டை கட்டிக் கொண்டு கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டுக் கொண்டு பந்தாவாக வநதார் ஜேட்லி.
ஆனால், பிட்ச் குழப்பத்தால் மேட்ச் தடைபட்டு ரசிகர்கள் நாற்காலிகளை உடைக்க ஆரம்பிக்கவே ஆள் நைசாக நழுவி காரில் ஏறி பறந்துவிட்டார்.
இதுகுறித்து டெல்லி பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெய் பிரகாஷ் அர்வால் விடுத்துள்ள அறிக்கையில், இந்த குழப்பத்திற்கு டெல்லி கிரிக்கெட் சங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும். உடனடியாக ஜெட்லி ராஜினாமா செய்ய வேண்டும். நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
நாட்டின் பெருமையும், பெயரும் இதனால் கெட்டுப் போய் விட்டது. ரசிகர்களின் பணம் வீணாகிப் போயுள்ளது என்றார்.
ஆனால், போட்டி ரத்தானாலும், ரசிகர்கள் செலுத்திய டிக்கெட் கட்டணம் முழுமையாக அப்படியே வழங்கப்படும் என ஜெட்லி அறிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்திற்காக அவர் பகிரங்க மன்னிப்பும் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷேவாக்குக்கு முன்பே தெரியுமா...?
இந்த நிலையில், டெல்லி பிட்ச் மோசமான முறையில் மாறியது குறித்து இந்திய தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக்குக்கு முன்பே தெரியுமா என்ற சந்தேகம் மற்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
காரணம், கொல்கத்தாவில் நடந்த 4வது ஒரு நாள் போட்டிக்கு முன்பு (அப்போட்டியில் அவர்தான் கேப்டன்) அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், போட்டித் தொடரை இங்கேயே முடிக்க விரும்புகிறேன். காரணம், டெல்லி பிட்ச் எப்படி இருக்குமோ, என்னவோ. எனவே இங்கேயே வென்று தொடரை வெல்ல முயற்சிப்போம் என்று கூறியிருந்தார்.
இதனால் ஷேவாக்குக்கு முன்கூட்டியே பிட்ச்சின் நிலை குறித்து தெரிந்து விட்டதோ என்ற ஐயம் எழுந்துள்ளது. ஷேவாக் டெல்லி வீரர் என்பதும் இங்கே நினைவு கூறத்தக்கது.
ஒருவேளை பிட்ச்சின் தன்மை குறித்து ஷேவாக்குக்கு சந்தேகம் வந்திருந்தால் அதை அவர் டெல்லி கிரிக்கெட் சங்கத்திடமோ அல்லது கிரிக்கெட் வாரியத்திடமோ அல்லது அணி நிர்வாகத்திடமோ கூறினாரா என்று தெரியவில்லை.
அவர் ஒருவேளை கூறியிருந்து, அதை சரிவர கண்டு கொள்ளாமல் பிட்ச் கியூரேட்டர் விட்டு விட்டாரா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications