பெண்ணாகரம் இடைத் தேர்தல் ஒத்திவைப்பு
வரும் ஜனவரி 20ம் தேதி இங்கு தேர்தல் நடத்தப்படும் என ஆணையம் அறிவித்தது. ஆனால், பொங்கல் பண்டிகை சமயத்தில் இடைத் தேர்தலை நடத்த பாமக, அதிமுக, மதிமுக, இடதுசாரிகள், பாஜக ஆகியவை எதிர்ப்புத் தெரிவித்தன.
தேர்தலை வேறு தேதிக்கு மாற்றுமாறு அவை கோரிக்கை விடுத்தன.
திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பொங்கல் சமயத்தில் தேர்தலை நடத்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்தது.
ஆனால், திமுக தேர்தலை தள்ளி வைக்குமாறு கேட்கவில்லை. மாறாக, தேர்தல் ஆணையம் என்ன சொன்னாலும் அதன்படி நடப்போம் என்று திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியும் இதே கருத்தைத் தெரிவி்த்தது.
இந் நிலையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டத்தைக் கூட்டி அவர்களின் கருத்தை அறியுமாறு நரேஷ் குப்தாவுக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் நரேஷ் குப்தா.
இக்கூட்டத்தில் திமுக சார்பில் பொன்முடி தலைமையில் இருவரும், அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இருவரும், காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, சுதர்சனமும், பாமக சார்பில் வக்கீல் பாலு தலைமையில் இருவரும், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் நரேஷ் குப்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், இக்கூட்டத்தில் கட்சிகளின் கருத்துகள் கருத்து அறியப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேதியிலேயே தேர்தலை நடத்த திமுக, காங்கிரஸ் ஆகியவை ஆதரவு தெரிவித்தன.
அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வேறு தேதியில் தேர்தலை நடத்த வேண்டும் என யோசனை தெரிவித்தன. இந்தக் கருத்துகள் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கப்படும். தேர்தல் ஆணையம் அதைப் பரிசீலித்து இறுதி முடிவை எடுக்கும் என்றார்.
சர்வகட்சிகளின் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்த நரேஷ் குப்தா, தேர்தல் தேதியை மாற்றலாம் என ஆணையத்திற்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து தேர்தல் வைக்கப்படுவதாக இன்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதிய தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆணையம் கூறியுள்ளது.
முதல் நாளில் மனு தாக்கல் இல்லை:
முன்னதாக நேற்று திட்டமிட்டபடி பென்னாகரம் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. ஆனால் நேற்று யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.
இதுகுறித்து தர்மபுரி கலெக்டர் பொறுப்பை வகிப்பவரும், தொகுதி தேர்தல் அதிகாரியுமான மகேஸ்வரி ரவிக்குமார் கூறுகையில், டிசம்பர் 22ம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மனுத்தாக்கல் செய்ய சனிக்கிழமை முதல் நாளாகும். இருப்பினும் யாரும் மனு தாக்கல் செய்யவி்ல்லை என்றார்.
சென்னையில் நவீன் சாவ்லா:
இந் நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா இன்று சென்னை வந்தார். தனிப்பட்ட முறையில் அவர் சென்னை வந்தாலும், மாநில தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் பண்டிகையையொட்டி பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.