பனிமூட்டம்-வட மாநிலங்களில் ரயில் போக்குவரத்து பாதிப்பு
டெல்லி: டெல்லி உள்பட வட மாநிலங்களி்ல் கடும் பனி மூட்டத்தால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று அதிகாலை நிலவிய கடும் பனி மூட்டத்தால் ஆந்திர பிரதேச எக்ஸ்பிரஸ், வைசாலி எக்ஸ்பிரஸ், லக்னோ மெயில் உள்பட பல முக்கிய ரயில்கள் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.
எனினும் பனி மூட்டம் காரணமாக விமான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.
டெல்லியில் இன்று காலை 5.7 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையே காணப்பட்டது. மிக குறைந்தபட்சமாக நேற்று 5.2 டிகிரி பதிவாகியிருந்தது. சராசரியாக 5ல் இருந்து 21 டிகிரி வரை வெப்பநிலை டெல்லியில் பதிவாகிவருகிறது.
கோல்கத்தாவிலும் வெப்பநிலை 11.4 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு குறைந்துள்ளது. சண்டிகரில் குறைந்தபட்ச வெப்பநிலை நேற்று 4.2 டிகிரி செல்ஷியஸ் வரை வந்திருந்தது.
ஜம்மு காஷ்மீரில் இரவு நேர வெப்பநிலை மைனஸ் 1.1 டிகிரி வரை செல்கிறது. ஜம்முவின் பனிஹால் நகரில் இரவு நேர வெப்பநிலை மைனஸ் 1.1 டிகிரியாகவும், படோடியில் 2 டிகிரியாகவும் பதிவாகியிருந்தது.
பல இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே பதிவாகின. நேற்று ஸ்ரீநகரில் அதிகப்பட்ச வெப்பநிலையே 7.2 டிகிரி தான். தெற்கு காஷ்மீரின் காஸிகாத் நகரில் நேற்று அதிகப்பட்ச வெப்பம் 10.1ஆக இருந்தது இன்று 4.7 டிகிரியாக குறைந்துள்ளது.
எனினும் காஷ்மீரில் தற்போதைய பனிப்பொழிவு முந்தைய காலகட்டங்களைக் காட்டிலும் குறைவு என்றே கருதப்படுகிறது.
வழக்கமாக குளிர்காலங்களில் காஷ்மீர் பகுதிகளில் 40 நாட்களுக்கு பனிப்பொழிவு இருக்கும். ஸ்ரீநகர், குல்மார்க், சோன்மார்க் போன்ற பகுதிகளில் ஏழு முதல் எட்டு அடி வரை உயரத்திற்கு பனி பொழிந்துகிடக்கும்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்தளவில் கணிசமான மாற்றங்கள் தெரிவதாகவும், புவிவெப்ப அதிகரிப்பின் விளைவாக பனிப்பொழிவு குறைந்து வருவதாகவும் சுற்றுச்சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குழாய்களில் தண்ணீர் வராமல் உறைந்துபோவது, நீர்நிலைகள் கெட்டியாவது, சாலைகள் ஐஸ்கட்டிகளாவது போன்றவை பருவகால காட்சிகள். ஆனால் சமீபத்திய பருவங்களில் இவை குறைந்து வருவதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.