மூளைச் சாவு-15 வயது மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த வீரப்பன்-லட்சுமி தம்பதியின் மகள் ஜெயபாரதி (15), பிளஸ்-1 படித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக இவர் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 23ம் தேதி ஜெயபாரதிக்கு தலைவலி கடுமையானதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் ஜெயபாரதியின் மூளையை பரிசோதனை செய்தபோது, மூளை நரம்பில் ரத்த கசிவு ஏற்பட்டு அபாயகரமான நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் ஜெயபாரதி மூளைச் சாவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விவரத்தை ஜெயபாரதியின் பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். கடும் அதிர்ச்சியடைந்த போதிலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஜெயபாரதியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் ஜெயபாரதியின் உடலில் இருந்து இதயம், கல்லீரல், சிறுநீரகம், கண் போன்ற உறுப்புகளை எடுத்தனர். இந்த உறுப்புகள் அனைத்தும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளன.
இதுகுறித்து ஜெயபாரதியின் உறவினர்கள் கூறுகையில், 'ஜெயபாரதியின் மூளை செயல் இழந்து விட்டதாகவும், அவளது உடலை பிற நோயாளிகளுக்கு தானம் செய்யலாம் என்றும் டாக்டர்கள் கூறினார்கள்.
உறுப்புகளை வசதி படைத்தவர்களுக்கு வழங்க எங்களுக்கு விருப்பம் இல்லை. இதனால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் ஏழை நோயாளிகளுக்கு உறுப்புகளை தானம் செய்யலாம் எனக் கூறினோம்' என்றனர்.












Click it and Unblock the Notifications