பெங்களூரில் திடீர் மழை-மின்வெட்டு-மக்கள் அவதி
பெங்களூர்: பெங்களூரில் நேற்று மாலை பெய்த திடீர் மழையால் வார இறுதியில் ஷாப்பிங் உள்ளிட்டவற்றுக்குக் கிளம்பிய மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
நேற்று பகல் முழுவதும் பெங்களூர் நகரில் இயல்பான வெப்ப நிலையே காணப்பட்டது. ஆனால் மாலையில் திடீரென பெரும் மழை பெய்தது. இதனால் ஷாப்பிங் கிளம்பியோர், குடும்பத்தோடு வெளியில் சென்றவர்கள் மழையை எதிர்பார்க்காமல் சாலையோரங்களில் தவிக்க நேரிட்டது.
அரபிக் கடலிலும், வங்கக் கடலிலும் ஏற்பட்ட மிதமான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையே இந்த திடீர் மழைக்குக் காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூர் நகர் முழுவதும் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மழை இப்படி சதி செய்தால், சனிக்கிழமை இரவு நகரின் பல பகுகளில் குறிப்பாக தெற்கு பெங்களூரில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் இருளில் தவித்தனர்.
சுப்ரமணியபுராவில் நடந்த மின்சார பராரமிப்புப் பணியே இதற்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று வரை பல பகுதிகளில் மின்சாரம் வரவே இல்லை.
கிரிநகர், ஜெயநகர் (அனைத்து பிளாக்குகளிலும்) நேற்று முழுவதும் மின்சாரமே இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
கடந்த சில நாட்களாக கடும் மின்வெட்டு அமலாக்கப்பட்டு வருவதால் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது. குடிநீர் மோட்டார்களை இயக்க முடியாமல் பெரும் சிக்கலாகியுள்ளது என்று பிடிஎம் லேவுட்டைச் சேர்ந்த ஒருவர் குமுறினார்.
இதே நிலைதான் ஜேபி நகர், ராம்கோ லேஅவுட் ஆகிய பகுதிகளிலும் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications