சாதியை ஒழிக்கவே சமத்துவபுரங்கள்- மு.க.ஸ்டாலின்

ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர் அடுத்த அஞ்சானூரில் 9 ஏக்கர், 7 சென்ட் நிலப்பரப்பில் ரூ.2 கோடியே 20 லட்சம் செலவில் 3வது சமத்துவபுரம் கட்டப்பட்டுள்ளது. இதை ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'சமத்துவபுரம் பெரியார் கண்ட கனவு. ஒருவரை அடையாளம் காண வேண்டும் என்றால் சாதியுடன் பெயரை சொல்லிதான் அடையாளம் காண வேண்டிய நிலையில் உள்ளோம்.
இந்த நிலை மாறி நாம் அனைவரும் தமிழன்- மனிதன் என்ற நிலை இந்த நாட்டில் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
நாட்டில் மேல் சாதி, கீழ் சாதி என்று இருக்க கூடாது. சாதி என்பது சதியின் காரணமாக ஒரு கால் முளைத்து சாதியாகி விட்டது. அதுபோல தி என்பது கொம்பு முளைத்து 'தீ'யாக கொளுந்து விட்டு எரியக் கூடிய நிலை ஏற்படுகிறது. இதை அகற்றுவதற்கு தான் சமத்துவபுர திட்டம்.
கடந்த ஆட்சி காலத்தில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அப்போது சமத்தவபுரத்தை பராமரிக்ககூட அவர்கள் முன்வரவில்லை.
தந்தை பெரியார் 95 வயது வரை வாழ்ந்தார். எனவே தமிழ்நாட்டில் 95 சமத்துவபுரங்கள் உருவாக்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர் அறிவித்திருந்தார். இதன்படி வரும் நிதியாண்டில் மொத்தம் 30 சமத்துவபுரங்களும், 2010-11ம் ஆண்டு 36 சமத்துவபுரங்களும் உருவாக்கப்பட உள்ளன.
கடந்த அதிமுக ஆட்சியில் மகளிர் குழுக்களுக்கு 1644 கோடி ரூபாய் வங்கி கடனும், 76 கோடி ரூபாய் சுழல்நிதியும் வழங்கப்பட்டது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டு காலத்தில் வங்கி கடனாக 4926 கோடி ரூபாய், சுழல் நிதியாக 215 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
99 சதவீதம் வட்டியை மகளிர் குழுக்கள் சரியாக செலுத்தி வரும் நிலையில் அவர்களுக்கு வட்டியில்லா கடன் தேவையில்லை என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications