மீண்டும் அதே டெட்ராய்ட் விமானத்தில் தீவிரவாதி புகுந்ததாக பீதி!!
கடந்த 25ம் தேதி நெதர்லாந்தில் இருந்து அமெரிக்கா சென்ற நார்த் வெஸ்ட் ஏர்லைன்ஸை விமானத்தில் நைஜீரியா நாட்டு தீவிரவாதி உமர் பரூக் அப்துல் முதாலிப் வெடிமருந்து மூலம் விமானத்தை தகர்க்க முயற்சி செய்தான். அவனை போலீசார் கைது செய்து இப்போது ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் அதே விமானத்தில் தீவிரவாதி நுழைந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட் நகருக்கு அதே நார்த் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. அதில் 257 பயணிகளும், 12 விமான ஊழியர்களும் இருந்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் விமானம் அமெரிக்க வானில் பறந்து கொண்டிருந்தது.
அப்போது ஒரு பயணி விமான கழிவறைக்கு சென்றார். அரை மணி நேரம் ஆகியும் அவர் இருக்கைக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விமான ஊழியர்கள் கழிவறை கதவை தட்டி வெளியே வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் வெளியே வரவில்லை.
எனவே, அவர் தீவிரவாதியாக இருப்போரோ, ஏதோ சதி வேலை செய்யும் நோக்கத்துடன் கழிவறைக்குள் புகுந்து இருக்கிறாரோ என கருதினார்கள்.
உடனடியாக டெட்ராய்ட் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
விமானத்தை தனியான ஒரு இடத்தில் தரை இறக்கும்படி கட்டளையிடப்பட்டது. அதன்படி விமானத்தை தரை இறக்கினார்கள். அங்கு தயாராக இருந்த போலீசார் விமானத்தைச் சுற்றி வளைத்தனர்.
உடனடியாக அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். அதுவரை கழிவறைக்குள் இருந்த பயணியையும் வெளியே கொண்டு வந்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது அவரும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. வியாபார விஷயமாக அமெரிக்கா வந்ததாக கூறினார்.
'நான் திவிரவாத செயல்களில் ஈடுபட முயற்சிக்கவில்லை. எனக்கு விமானத்தில் திடீரென வயிறு கோளாறு ஏற்பட்டது. இதனால்தான் விமான கழிவறையில் நீண்ட நேரம் இருந்தேன்' என்று கூறினார்.
இருந்தாலும் அவர் மீது சந்தேகம் அடைந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
பின்னர், அவரின் உடைமைகள் உள்ளிட்டவற்றை போலீசார் சோதனை செய்து பார்த்தனர். அதன் பின் பயப்படும்படி எதுவும் இல்லை எனக் கூறினர்.
அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் தரையிறங்கும் வரை கலவர முகத்துடனேயே காணப்பட்டனர். சந்தேகப்பட்ட நபர் தீவிரவாதி அல்ல எனத் தெரிந்த பின் தான் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர் என்று ஊழியர்கள் கூறினர்.
தன்னை தீவிரவாதி என சந்தேகித்ததால் அந்த நைஜீரிய பயணி மிகவும் மன வருத்தத்துக்கு ஆளானதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.