ரயில் டிரைவருடன் கட்டிப்புரண்டு சண்டை போட்ட காவலர்
சென்னை: போலீஸ்காரரும், ரயில் டிரைவரும் கட்டிப் புரண்டு சண்டை போட்ட சம்பவம் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு-எழும்பூர் இடையிலான மின்சார ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து நேற்றிரவு 10.15 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.
அந்த ரயிலின் டிரைவர் சீனிவாசன் என்ஜினை நோக்கி சென்றுகொண்டிருந்த போது, முதல் வகுப்பு பெட்டியில் இருந்து ஏதோ சத்தம் கேட்டது. சீனிவாசன் அங்கு சென்று பார்த்தார்.
அந்த பெட்டியில் செங்கல்பட்டு ரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரியும் குமார் (28) என்ற காவலருக்கும், பிச்சைக்காரர் ஒருவருக்கும் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது.
பிச்சைக்காரரிடம் குமார் பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது டிரைவர் சீனிவாசன், 'பிச்சைக்காரர்களை கூட நீங்கள் விட்டுவைக்க மாட்டீர்களா' என கிண்டலாக கேட்டுள்ளார்.
இதனால், குமார் ஆத்திரமடைந்தார். குமாருக்கும், டிரைவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அடிதடியில் முடிந்தது. அடிதடியின் உச்சக்கட்டமாக இருவரும் பிளாட்பாரத்தில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.
பின்னர் அருகில் இருந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டு விலக்கிவிட்டனர். ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று சீனிவாசன் புகார் செய்தார்.
ஸ்டேஷன் மாஸ்டர் காவல் நிலையத்தில் புகார் தரவே குமார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. காயமடைந்த சீனிவாசன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
காவலர் குமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடுகின்றனர்.