ஆந்திராவில் காய்கறி -பழங்கள்-பூ விலை கிடுகிடு உயர்வு!
ஹைதராபாத்: தெலுங்கானா விவகாரத்தில் நாளுக்கு நாள் ஆந்திராவில் நிலைமை மோசமடைந்து வருவதால் அத்தியாவசியப் பொருள்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.
ஆந்திராவின் பல பகுதிகளில் கடந்த 1 மாதமாக பஸ்- லாரிகள் ஓடவில்லை. குறிப்பாக நீண்ட தூர பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டன.
இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள்- பழங்கள், அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
காய்கறி, பழங்களின் விலை தற்போது 5 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.12 ஆக இருந்த வெங்காயம், தற்போது ரூ.65-க்கும் மேல் விற்கப்படுகிறது.
உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், தக்காளி, பீன்ஸ், கேரட், பீட்ரூட் போன்றவற்றின் விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
இதே போல் பூ விலையும் மிக கடுமையாக உயர்ந்துள்ளது. கனகாம்பரம் பூ ஒரு முழம் ரூ.40-க்கும், மல்லிகை ரூ.35-க்கும் விற்கப்படுகிறது.
ஆந்திராவில் பல கிராமங்களில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காததால், பல மைல் தூரம் பயணம் செய்து நகரங்களுக்குப் போகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அண்டை மாநில எல்லையோர கிராமங்களில் வசிக்கும் ஆந்திர மக்கள் ஓரளவு தப்பித்துக் கொண்டனர். இவர்கள் பக்கத்து மாநிலங்களில் தங்களுக்குத் தேவையானதை ஓரளவு குறைந்த விலையில் வாங்கிக் கொள்கின்றனர். குறிப்பாக தமிழக எல்லைப் புறம் வசிக்கும் தெலுங்கர்கள், தமிழகத்திலேயே அனைத்துப் பொருள்களையும் குறைந்த விலையில் வாங்கிக் கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications