இரட்டை வாக்குரிமை கோரி தலித் அமைப்பு போராட்டம்
கரூர்: தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை கோரி டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு பிப்ரவரி மாதம் 3ம் தேதி அன்று மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தலித் விடுதலை இயக்க மாநில பொதுச் செயாலளர் தலித் ஞானசேகரன் அறிவித்துள்ளார்.
தலித் விடுதலை இயக்க இளைஞரணி சார்பில் அருந்ததியர் இளைஞர் அரசியல் அணிவகுப்பு மாநாடு கரூரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு அதன் மாநில இளைஞரணி செயலாளர் சசிக்குமார் தலைமை வகித்தார்.
மாநாட்டுத் தீர்மானங்களை மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் வாசித்தார்.
அப்போது தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தலித் ஞானசேகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நமது சமுகத்தில் தலித் மக்கள் இன்றும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தான் உள்ளனர். அவர்களது கல்வி, வேலைவாய்பபு போன்றவற்றில் போதுமான அளிவு முன்னேற்றம் ஏற்படவில்லை.
தலித் மக்களுக்காக சுதந்திரம் அடைந்த போது டாக்டர் அம்பேத்கர் வெள்ளையர்களிடம் இரட்டை வாக்குரிமை போராடி பெற்றார். ஆனால் அதை மகாத்மா காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்து தடுத்து விட்டார். இதனால் இரட்டை வாக்குரிமை கனவு கானல் நீரானது. இரட்டை வாக்குரிமை மட்டுமே தலித் மக்களுக்கு நிரந்தர உரிமையை பெற்றுத் தரும்.
பிப்ரவரி 3ம் தேதி, டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு எனது தலைமையில் இரட்டை வாக்குரிமை கோரிக்கையை முன் வைத்து போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்தில் 21 மாவட்டங்களிலிருந்து சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.
இரட்டை வாக்குரிமை என்பது டாக்டர் அம்பேத்கர் கண்ட கனவு. அதை அடைய நாங்கள் எத்தகைய உயிர் தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம் என்றார்.