டெல்லி கிரிக்கெட் சங்க கூட்டம்-ஆசாத் தாக்கப்பட்டாரா?
கோட்லா பிட்ச் பிரச்சினை இன்னும் ஓயவில்லை. மாறாக தீவிரமடைந்துள்ளது. டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க வருடாந்திர பொதுக் குழுக் கூட்டம் இன்று நடந்தது.
அப்போது கோட்லா பிட்ச் குறித்து சூடான வாக்குவாதம் நடந்துள்ளது. இது பெரும் மோதலமாக மாறியதாக தகவல்கள் கூறுகின்றன.
கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத், தன்னை அவதூறாகப் பேசி அவமதித்து விட்டதாகவும், தாக்கி விட்டதாகவும் கூறி வெளிநடப்புச் செய்தார்.
கூட்டத்திலிருந்து வெளிவந்த அவர், என்னைக் கூட்டத்தில் அவமதித்து விட்டனர். தாக்கி விட்டனர் என்றார். அதேபோல சுனில் கோயல் என்ற உறுப்பினரும் தான் தாக்கப்பட்டதாக கூறினார்.
ஆனால் யாரும் கூட்டத்தில் தாக்கப்படவில்லை என்று சங்க உயர்மட்ட வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
கோட்லா பிட்ச் குறித்தும், சங்க நிர்வாகம் குறித்தும் நான் கேள்வி எழுப்பினேன். இதையடுத்து சில உறுப்பினர்கள் எழுந்து என்னை அவதூறாகப் பேசினர். அவர்களுக்கு ஆதரவாக நிறையப் பேர் சேர்ந்து கொண்டு வெளியில் அவதூறாகப் பேசினர்.
ஸ்டேடியத்திற்காக ரூ. 30 கோடி செலவிட்டதாக கூறினர். சரி, எப்படியெல்லாம் செலவிட்டீர்கள் என்று கேட்டதற்குப் பதில் இல்லை. மாறாக அவதூறு பதில்தான் வந்தது.
இதேபோல இன்னொரு மூத்த உறுப்பினரும் கூட சிலரால் தாக்கப்பட்டார்.
1972ம் ஆண்டிலிருந்து நான் சங்க உறுப்பினராக இருக்கிறேன். இதை இப்படியே விட மாட்டேன். ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்புவேன். தகவல் அறியும் சட்டத்தின் மூலமும் கேள்வி கேட்பேன் என்றார் கீர்த்தி ஆசாத்.
கீர்த்தி ஆசாத் பாஜக எம்.பி. ஆவார். டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவரான அருண் ஜெட்லி, ராஜ்யசபா பாஜக தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அருண் ஜெட்லி மீது பாய்ந்துள்ளார் கீர்த்தி ஆசாத். அருண் ஜெட்லி, தார்மீக நெறிமுறைகளுக்கு மதிப்பு அளிப்பவர். பிட்ச் விவகாரத்தைத் தொடர்ந்து அவர் பதவி விலகுவார் என எதிர்பார்க்கிறேன் என்றார் கீர்த்தி ஆசாத்.
ஆனால் கீர்த்தி ஆசாத் சொல்வது போல எதுவுமே நடக்கவில்லை என்று சங்க பொதுச் செயலாளர் எஸ்.பி. பன்சால் தெரிவித்தார். அவர் கூறுகையில், கூட்டத்தில் எதுவும் நடக்கவில்லை. மிக மிக அமைதியாக நடந்து முடிந்தது. கீர்த்தி ஆசாத் போன்ற பொறுப்பான நபர் இதுபோல பேசக் கூடாது, இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
கிரிக்கெட் சங்கத்தில், ஊழல் இருப்பதாக கீர்த்தி ஆசாத் கூறுவதிலும் உண்மை இல்லை. என்ன ஊழல் நடக்கிறது என்று தெரியவில்லை. கீர்த்தி ஆசாத் சொல்வது முற்றிலும் தவறு. இங்கு அனைத்துமே தெளிவாக உள்ளது என்றார்.
சங்கத் துணைத் தலைவர் சேத்தன் சவுகானும் பன்சால் பேச்சை பிரதிபலித்தார். கூட்டத்தில் யாரும், யாரையும் தாக்கவில்லை என்றார் சவுகான்.