ட்வீட்டர் கேள்வி: எஸ்.எம்.கிருஷ்ணா Vs சசி தரூர்!
சசி தரூர் 'அக்கப்போர்' தாங்க முடியவில்லை. எதற்கெடுத்தாலும் ட்வீட்டர் மூலம் எதையாவது ஒன்றை அனுப்பி சர்ச்சையை இழுத்துக் கொண்டு வந்து விடுகிறார்.
முன்பு விமானங்களில் உள்ள எக்கானமி வகுப்பை மாட்டுக் கொட்டகை என்றார். இதேபோல தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருகிறார். சோனியா காந்தியும், பிரணாப் முகர்ஜியும், இவரை கூப்பிட்டுக் கண்டித்தும் கூட இன்னும் ட்வீட் செய்வதை விட்டபாடில்லை சசி தரூர்.
தற்போது எஸ்.எம்.கிருஷ்ணாவை டென்ஷனாக்கியுள்ளார் சசி தரூர். புதிய விசா விதிமுறைகள் குறித்து அதிருப்தி தெரிவித்து ட்வீட்டரில் செய்தி அனுப்பியுள்ளார் தரூர். இது எஸ்.எம்.கிருஷ்ணாவை கோப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதுபோன்ற விஷயங்களை பகிரங்கமாக விவாதிக்கக் கூடாது. இதுகுறித்து ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால், அதிருப்திகள் இருந்தால் அதை அமைச்சரவையின் நான்கு சுவர்களுக்குள் வைத்துததான் விவாதிக்க வேண்டுமே தவிர இப்படி ட்வீட்டர் போன்றவற்றின் மூலம் விவாதிக்கக் கூடாது.
அரசின் செயல்பாடுகள் மிகவும் சீரியஸானவை. அவற்றை அதே பார்வையுடன்தான் அணுக வேண்டும். இவ்வாறு ட்வீட்டர் செய்திகள் மூலம் கேள்வி கேட்பதும், விமர்சிப்பதும் சரியான போக்கு அல்ல.
விசா பிரச்சினை தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்திற்கும் உள்துறை அமைச்சகத்திற்கும் இடையே எந்தக் கருத்து மோதலும் இல்லை. இரண்டும் ஒரே கருத்தையே கொண்டுள்ளன என்று கூறியுள்ளார் கிருஷ்ணா.