ருசிகாவை டிஸ்மிஸ் செய்த பள்ளி-ரத்தோர் மீது வழக்கு
இதுதொடர்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரஞ்சன் லக்கன்பால் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,
ருசிகா கிர்ஹோத்ரா பள்ளியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்கள் பெரும் குழப்பமாக உள்ளன. எனவே பள்ளி நிர்வாகத்தின் பங்கு குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
அதேபோல ருசிகாவை தற்கொலை செய்யத் தூண்டிய ரத்தோர் மீது இந்தியன் பீனல் கோட் 305ன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.
மேலும் ருசிகாவின் சகோதரர் அஷு மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டன. அவர் துன்புறுத்தப்பட்டுள்ளார். சித்திரவதை செய்யப்பட்டார். மன ரீதியான உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டார்.
அவர் மட்டுமல்லாமல், ருசிகாவின் மொத்தக் குடும்பமும் சித்திரவதை செய்யப்பட்டு, மன உளைச்சலுக்குள்ளாக்கப்பட்டது என்று கூறியுள்ளார் லக்கன்பால்.
மாஜி டிஜிபி ரத்தோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது ருசிகாவுக்கு வயது 14. சண்டிகரில் உள்ள சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் பள்ளிக் கட்டணத்தைக் கட்டவில்லை என்று கூறி பள்ளி நிர்வாகம் அவரை டிஸ்மிஸ் செய்தது. ஆனால், ரத்தோரின் நெருக்குதலால்தான் ருசிகா பள்ளியிலிருந்து நீக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
விசாரணைக்கு உத்தரவு...
இந்த நிலையில் சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் பள்ளி குறித்து விசாரணை நடத்த சண்டிகர் உள்துறை செயலாளர் ராம் நிவாஸ் உத்தரவிட்டுள்ளார்.
ருசிகாவை நீக்கியதற்கான காரணத்தை விளக்குமாறும் பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராம் நிவாஸ் கூறுகையில், ருசிகாவின் தோழி ஆராதனாவின் தாயார் மது பிரகாஷ் கொடுத்து புகாரின் பேரில், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த விசாரணையை பிரேர்னபுரி மாஜிஸ்திரேட் மேற்கொள்வார்.
பள்ளியிலிருந்து ருசிகா நீக்கப்பட்டது ஏன், விளக்குவதற்கு முன்பு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டதா உள்ளிட்டவை குறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான சாட்சியங்களும் சேகரிக்கப்படும். விசாரணை முடிவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒரு வாரத்திற்குள் விசாரணை முடிவடையும் என்றார் நிவாஸ்.