கோவை தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு சிறப்பு ரயில்கள்- ரயில்வே
சேலம்: கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ராம் கூறியுள்ளார்.
மாநாட்டுக்கு சிறப்பு ரயில் விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராம் பேசுகையில்,
கோவையில் நடக்கும் உலக செம்மொழி மாநாட்டுக்கு சிறப்பு ரயில் இயக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நிச்சயம் சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் ரயில்வே கோட்டத்திற்கு 2010ல் 6 புதிய ரயில்களை இயக்க திட்ட மாதிரி தயாரிக்கப்பட்டு உள்ளது.
கோவை - பெங்களூர், கோவையில் இருந்து, சென்னை, திருப்பதி, செங்கோட்டை, சேலம் (பாசஞ்சர்), ராமேஸ்வரம் வழித்தடங்களில் புதிய ரயில்களை இயக்குவதற்கான திட்ட மாதிரியை சென்னையில் இருக்கும் தெற்கு ரயில்வே தலைமையகத்திற்கு அனுப்பியுள்ளோம்.
சேலம் - கரூர் அகல ரயில் பாதை அமைப்பு பணி 60 சதவீதம் முடிந்துள்ளது. பாதை சீரமைப்பு, பாலங்கள் அமைத்தல் முழுமை பெற்று விட்டது. இந்த திட்டத்திற்கு கூடுதலாக ரூ.200 கோடி கேட்டுள்ளோம். நிதி ஒதுக்கீடு தாமதமானதால் தான் திட்டப்பணிகளை விரைந்து முடியவில்லை. வரும் நிதியாண்டில் போதிய நிதி ஒதுக்கீட்டை பெற்று பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றார் ராம்.