தெலுங்கானா போராட்டக்காரர்கள் சதி-என்.டி.திவாரி
ஆந்திர மாநில ஆளுநர் பதவியிலிருந்து விலகி ஒரு வழியாக சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் போய்ச் சேர்ந்துள்ளார் திவாரி.
அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஆந்திராவில் உள்ள சிலர், என் மீது பொய்யான, கற்பனையான புகார்களை ஜோடித்து கூறி உள்ளனர். குறிப்பாக சொல்லப் போனால் தெலுங்கானா போராட்டக்காரர்கள் இட்டுக் கட்டி அரங்கேற்றிய திட்டமிட்ட சதி என்றுதான் கூறுவேன்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் ஹைதராபாத் வர திட்டமிட்டு இருந்தார். அப்போது தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு போராடி வரும் சிலர், அவரை சந்திக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டனர். ஆனால் நான் அதற்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டேன்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், சதித்திட்டம் தீட்டி, என் மீது கற்பனையான புகார்களை புனைந்து அரங்கேற்றி விட்டார்கள்.
இதற்காக யார் மீதும் எனக்கு பகையோ, விரோதமோ, காழ்ப்புணர்ச்சியோ இல்லை. இந்த நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவேன். அரசியலை விட்டு விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றார் திவாரி.