ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்-கண்டித்து வியாபாரிகள் போராட்டம்
சென்னை: சென்னை ஆவடியில், ஏரி நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கடைகளை அகற்றுவதைக் கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தலைமையில், போராட்டம் நடந்தது.
ஆவடி நகராட்சிக்கு, புதிய ராணுவ சாலையில் புதிய அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதன் பிரதான நுழைவாயில் புதிய ராணுவ சாலையில் அமைக்கப்படுகிறது. இதையடுத்து இந்த சாலையில் ஏரி நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கடைகளை இடிக்க ஆவடி நகராட்சி முடிவு செய்தது.
நகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி, பூந்த மல்லி தாசில்தார் வள்ளி முத்து ஆகியோர் முன்னிலையில் இன்று கடைகள் இடிக்கப்பட்டது.
இதற்கு வியாபாரிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. வியாபாரிகள் அனைவரும் மார்க்கெட் பகுதியில் திரண்டனர். தகவல் அறிந்ததும் வெள்ளையன் விரைந்து வந்தார். பின்னர் அவர் தலைமையில், சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து வெள்ளையன் உள்ளிட்டோரைக் கைது செய்து அப்புறப்படுத்தினர். ஆக்கிரமிப்புக் கடைகளும் போலீஸ் பாதுகாப்புடன் இடித்துத் தள்ளப்பட்டன.