வைகுண்ட ஏகாதசி கூட்ட நெரிசல்: அமைச்சர் உறவினர் பலி

வைணவத் தலங்களில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் காரணமாக கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடாசலபதி கோவிலில் ஏகாதசி விழா வையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதனால் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பின. தரிசனம் செய்ய பக்தர்கள் கியூ காம்ப்ளக்சில் நீண்ட நேரம் காத்திருந்தனர். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரித்தது.
கியூ காம்ப்ளக்சில் 24 மணி நேரத்துக்கு மேலாக பக்தர்கள் காத்திருந்ததால் அவர்கள் பொறுமை இழந்து கோவில் நிர்வாகத்தை கண்டித்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் தெலுங்குதேசம் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் கோவில் நிர்வாக அலுவலகம் முன் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
தெலுங்குதேசம் எம்.பி. என். சிவபிரசாத்துக்கு வி.ஐ.பி. தரிசனத்துக்கு அனுமதி மறுத்ததால் அவர் கோவில் நிர்வாக அதிகாரி மீது தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் போலீசில் புகார் செய்தார்.
வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ் அருகில் பக்தர்கள் முண்டியடித்துச் சென்றதால் பயங்கர நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
அமைச்சரின் உறவினர் பலி...
இந்த நெரிசலில் சிக்கி கர்நாடக அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவினர் மயங்கி விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். கோவில் அதிகாரிகள் கூறும்போது, அவர் கியூ காம்ப்ளக்ஸ்சில் இறக்கவில்லை. கோவிலுக்கு வெளியேதான் இறந்ததாக தெரிவித்தார்.
வைகுண்ட ஏகாதசிக்கு 1,500 வி.ஐ.பி. பாஸ்கள் வழங்கப்பட்டு இருந்தன. ஆனால் நாடு முழுவதும் இருந்து 3,000-க்கும் மேற்பட்ட வி.ஐ.பி.க்கள் வி.ஐ.பி. அனுமதி சீட்டுடன் வந்திருந்தனர். கியூ காம்ப்ளக்ஸ் உள்பட அனைத்து இடங்களிலும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications