ருசிகா சம்பவத்தின் எதிரொலி-இன்னொரு மாஜி டிஐஜி மீது ராஜஸ்தான் பெண் கற்பழிப்பு புகார்
ஜெய்ப்பூர்: ருசிகா கற்பழிப்பு வழக்கில், மாஜி டிஜிபி தண்டிக்கப்பட்டதைப் போல, தன்னைக் கற்பழித்து மாஜி டிஐஜியும் சட்டத்தின் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் கூறியுள்ளார்.
ராஜஸ்தானின் பந்திககுயி என்ற பகுதியைச் சேர்ந்தவர் அப்பெண். இவர் கடந்த 1997ம் ஆண்டு அப்போதைய டிஐஜி மதுகர் டான்டன் என்பவரால் கற்பழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தனக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்று இப்பெண் கூறுகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஹரியானா முன்னாள் டிஜிபியாவது தண்டனைக்குள்ளாகியுள்ளார். ஆனால் எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்கிறார் இப்பெண்.
டான்டன் மீது தாஸா போலீஸார், 1997ம் ஆண்டே வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
மதுகர் டான்டன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். கடந்த 12 வருடங்களாக தலைமறைவாகவே இருக்கும் அவரைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகிறார்களாம். அப்பெண்ணின் கணவர், மதுகர் டான்டனிடம் ஆர்டர்லியாக வேலை பார்த்து வந்தார். இவரை 2001ம் ஆண்டு கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்து விட்டாராம் டான்டன்.
இதுகுறித்து அப்பெண்ணின் கணவர் கூறுகையில், மூத்த காவல்துறை அதிகாரிகள் என்னிடம் பெரும் பணத்தைக் கொடுத்து வழக்கை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தினர். ஆனால் நான் மறுத்து விட்டேன். இதையடுத்து என்னை அடிக்கவும் செய்தனர். பின்னர் என்னைக் கட்டாயப்படுத்தி வேலையிலிருந்து விலகச் செய்து விட்டனர்.
டான்டனுக்கு பல அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு உள்ளதாம். மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுடன் அவருக்கு நல்ல நெருக்கமான நட்பு இருந்ததாம் என்று கூறுகிறார் தாஸா எம்.பி. கிரோரி லால் மீனா.
கடந்த 2002ம் ஆண்டு டான்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நொய்டாவில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்யுமாறு டாஸா கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் நொய்டா நிர்வாகம் அதை கண்டுகொள்ளவே இல்லை.
தற்போது ஹரியானாவில் ருசிகா கற்பழிப்பு வழக்கில் இத்தனை காலம் கழித்து தீர்ப்பு வந்துள்ளது ராஜஸ்தான் பெண்ணுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரும், அவரது கணவரும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டைப் பார்த்து முறையிட தீர்மானித்து அணுகினர். ஆனால் கெலாட் அவர்களைப் பார்க்க மறுத்து விட்டாராம்.
கெலாட்டின் இந்தப் போக்கைக் கண்டித்து அப்பெண்ணும், அவரது கணவரும், கிரோரி லால் மீனா எம்.பியுடன் சேர்ந்து கெலாட் வீடு அருகே உள்ள ரயில்வே டிராக்கில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.