அரசு கொடுத்த இலவச வீடு இடிந்து குழந்தை சாவு
நாகப்பட்டினம்: நாகை அருகே, தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் காயமடைந்த 2வயது ஆண் குழந்தை இறந்தான்.
நாகப்பட்டினம் அருகில் உள்ளது தெத்தி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 1995ம் ஆண்டு அரசு சார்பில், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ், 75 தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன.
கட்டப்பட்ட சில ஆண்டுகளிலேயே இந்த வீடுகள் சிதிலமடைந்து காணப்பட்டன. இந்நிலையில், கடந்த 25ம் தேதி தொகுப்பு வீட்டில் வசிக்கும் பாக்யராஜ் என்பவரின் வீட்டின் மேற்கூரையில் உள்ள சிமென்ட் பெயர்ந்து விழுந்தது.
இதில் பாக்யராஜின் இரண்டாவது மகன் ராஜசேகரனுக்கு (2) தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் வீடு திரும்பிய சிறுவன் பரிதாமாக இறந்தான்.
இந்த சம்பவம் குறித்து நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.