கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக்க போராட்டம்
கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்றன.
'விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் ரயில் நிலைய பணிகளை துரிதப்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கள்ளக்குறிச்சியில் உண்ணாரவிரதப் போராட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி வியாபாரிகள் சங்கம், மற்றும் நகர மக்கள் நல மன்றம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நடந்த உண்ணாவிரதத்தின் போது கள்ளக்குறிச்சியில் கடைகளை அடைக்குமாறு போராட்டக்குழுவினர் அழைப்பு விடுத்தனர்.
கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து இப்பகுதியிலுள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. சின்னசேலம், சங்கராபுரம் பகுதியில் வியாபாரிகளும் கடையடைப்பு செய்தனர்.
அனைத்துக் கட்சி பிரமுகர்களும், வியாபாரிகளும், சமூக அமைப்பை சேர்ந்தவர்களும் இதே கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.