கசக்கும் சர்க்கரை... கிலோ ரூ.40!
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலை விஷம் போல உயர்ந்து வருகின்றன, இப்போது. இதனால் ஓரளவு குறைந்த விலையில் ரேஷனில் விற்கப்படும் பொருள்களை வாங்க வரிசையில் நிற்கின்றனர் மக்கள்.
குறிப்பாக சர்க்கரை விலை இதுவரை இல்லாத அளவு உச்சத்துக்கு சென்றுள்ளது. 100 கிலோ கொண்ட சர்க்கரை மூட்டை கடந்த 2 மாதங்களாக ரூ.3250க்கு விற்கப்பட்டது. இப்போது ரூ.3530 ஆக உயர்ந்து விட்டது. இதனால் சில்லறை கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.38லிருந்து ரூ.40 வரை விற்கப்படுகிறது.
காரணம் என்ன?:
சர்க்கரை வரத்து கணிசமாகக் குறைந்துவிட்டதே இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. விவசாயிகள் முன்பெல்லாம் கரும்பு,நெல் மற்றும் வாழை பயிரிடுவதில்தான் கவனம் செலுத்தி வந்தனர்.
ஆனால் இப்போது கரும்பு பயிரிடுவதையே பெரும்பாலும் குறைத்துக் கொண்டுள்ளனர் விவசாயிகள். இதனால் பொங்கல் நெருங்கும் இந்த சமயத்தில் சர்க்கரை ஆலைகளில் கரும்பு வரத்து நின்றுவிட்டது. ஆலையின் அரவையும் நின்றுவிட்டது.
இதன் காரணமாக மத்திய அரசு சர்க்கரையை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளது.
இந்தியாவுக்கு பெரும்பாலும் பிரேசில் நாட்டில் இருந்து சர்க்கரை வந்தது. தற்போது அங்கு கன மழையால் கரும்பு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் சர்வதேச சந்தையில் சர்க்கரை விலை மேலும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்த விலை ஏற்றம் காணப்பட்டது, என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
நிலைமை அத்தனை சீக்கிரத்தில் சரியாகுமா என்பது சந்தேகமே என்கிறார்கள். எனவே சர்க்கரை விலை மகா கசப்பான அளவு உயரும் என்பதே நிதர்சனம்.