தவறு செய்யும் ஜமாத் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை -அப்துல்ரகுமான்
பரமக்குடி: தவறு செய்கின்ற ஜமாத் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அப்துல்ரகுமான் தெரிவித்தார்.
பரமக்குடி வந்த தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அப்துல்ரகுமான் கூறுகையில்,
வக்புவாரியத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் பெறுமான சொத்து உள்ளது. இந்த சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலும், மீட்க முடியாத நிலையில், இழந்து போன சொத்தாகவே உள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் வசம் உள்ள 7000 ஏக்கர் நிலங்களுக்கு, எந்த இழப்பீடும் அரசு தராமல் உள்ளது. திருச்சி பாரதி தாசன் பல்கலை இடத்துக்கு இழப்பீடு கேட்டுள்ளோம்.
வருமானம் ஈட்டும் வகையில் திருநெல்வேலி சக்கரம் பள்ளி இடத்தில் வணிக வளாகம், தழையூத்தில் பாலிடெக்னிக், கான்பிரன்ஸ் ஹால், உணவு விடுதி கட்டவும், பாளையங்கோட்டையில் இன்ஜினியரிங் கல்லூரி அல்லது பாலிடெக்னிக் கட்டவும் திட்டம் உள்ளது.
திண்டிவனம் காலி நிலத்தில் புற்று நோய் மருத்துவமனை கட்ட, டாடா குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், திருச்சி அல்லது தஞ்சாவூரில் மருத்துவக்கல்லூரி கட்டப்படும்.
லக்னோ பல்கலை கழகம் ஐந்து மாநிலங்களில் கிளைகள் தொடங்க இடம் கேட்டுள்ளது. திருவண்ணாமலையில் 250 ஏக்கர் நிலம் உள்ளதால் இங்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.
பொது சொத்துகளை பாதுகாக்கும் விதமாக, தவறு செய்கின்ற ஜமாத் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.