செம்மொழி மாநாட்டில் இளநீர், நுங்கு: கள் இறக்குவோர் சங்கம் வேண்டுகோள்
கோவை: கோவையில் நடைபெற இருக்கும் செம்மொழி மாநாட்டில் உடலுக்கு கேடு விளைவிக்கும் 'பாட்டில் குளிர்பான'ங்களுக்கு தடை விதித்து, இளநீர் மற்றும் நுங்கு போன்றவற்றை வினியோகிக்க அரசு உத்தரவிட வேண்டு்ம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கள் இறக்குவோர் சங்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி இக்கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், 'கோவையில் வரும் ஜூன் மாதம் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு துவங்குவதற்கு முன்னதாக தமிழகத்தில் கள் இறக்குவதற்கு போடப்பட்ட தடையை நீக்கவேண்டும்.
மாநாட்டின் போது வெப்பத்தின் தாக்கத்தை தணிக்கவும், தமிழரின் தாகத்தை தீர்க்கவும், தமிழ் கலாச்சாரத்தோடு ஒன்றிய பாரம்பரிய இயற்கை முறையிலானதும், உடலுக்கு நன்மை பயப்பதுமான இளநீர் மற்றும் நுங்கு போன்றவற்றை வினியோகிக்க வேண்டும்.
இதற்கு மாறாக பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர், பிளாஸ்டி பைகளில் போடப்பட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாதுகாப்பற்ற தண்ணீர் பாக்கெட்டுகள், வெளிநாட்டு குளிர்பான வகைகள் உள்ளிட்டவற்றை மாநாட்டு வளாகத்தில் விற்க அரசு தடை விதிக்க வேண்டும்.
தமிழ் பாரம்பரியத்தின் அடையாளத்தை மாநாட்டில் கலந்துகொள்வோருக்கு உணர்த்துவதோடு, அவர்களின் உடல்நலத்துக்கும் நன்மை பயப்பதாக இது அமையும்.
வெல்லம், இனிப்புகள், பனங்கற்கண்டு போன்ற தேங்காய் மற்றும் பனையில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை மாநாட்டில் விற்பனை செய்யவேண்டும்.
இந்த உணவுகளையும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பிளேட்டுகளை தவிர்த்துவிட்டு தென்னை, பனை ஓலைகளால் தயாரிக்கப்பட்ட தட்டுகளில் வினியோகிக்கலாம்.
சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலத்துக்கு பாதுகாப்பான வாழ்க்கை முறையை இயற்கையோடு இணைந்த தமிழர்களின் கலாச்சாரத்தை மாநாட்டில் வெளிப்படுத்த இது நல்ல வழிமுறையாக அமையும்' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications