அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் நிலநடுக்கம்
சான்டீகோ: அமெரிக்கா-மெக்சிகோ எல்லைப் பகுதியில் புதன்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் அமெரிக்காவின் சான்டீகோ நகரில் வெகுவாக உணரப்பட்டதாக கூறப்படுகிறது. மெக்சிகலி நகரில் இருந்து தென்கிழக்கே 30 கி.மீ தொலைவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத் தகவல் தெரிவிக்கிறது.
முதல் அதிர்வைத் தொடர்ந்து மீண்டும் 4.8 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு புகம்பத்துக்கு பிந்தைய அதிர்வுகளும் தொடர்ந்து ஏற்பட்டதாக ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் சான்டீகோ நகரில் பொதுமக்கள் பீதிக்குள்ளாகி அலுவலகங்கள் மூடப்பட்டன. நகரில் சுமார் 14 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 20 நிமிடங்களுக்கு மேலாக செல்போன் சேவை செயலிழந்தன.
புதன் கிழமை காலை 10.48க்கு பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரில் உள்ள மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகள் உடனடியாக வெளியே கொண்டுவரப்பட்டதாகவும் நகர பாதுகாப்பு அதிகாரி ரெணி ரொசாடோ தெரிவித்தார்.
பல இடங்களில் கட்டிடங்களுக்கு விரிசல் போன்ற சிறிய அளவிலான சேதாரங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது.
சான்டீகோ நகரில் இருந்து மெக்சிகலி நகர் வரை பல இடங்களிலும் இந்த நிலநடுக்கம் 20 நிமிடங்கள் வரை உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடகிழக்கு மாநிலங்களில் மீண்டும்...:
இந்தியாவின் வடகிழக்கே மியான்மர் எல்லையை ஒட்டி பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் 3.28 மணிக்கு பூட்டானில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 என பதிவான இந்த நிலநடுக்கம் ஷில்லாங் நகரில் உணரப்பட்டது.
இதனால் உயிரிழப்போ, சேதாரமோ ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications