தெலுங்கானா-ஆந்திர அமைச்சர்கள் ராஜினாமா வாபஸ்
ஐதராபாத்: தனி தெலுங்கானா கோரிக்கைக்காக பதவிகளை ராஜினாமா செய்த 13 ஆந்திர அமைச்சர்களும் தங்கள் முடிவை வாபஸ் வாங்கியுள்ளனர். தெலுங்கானா விவகாரம் குறித்த பேச்சுவார்த்தைக்கு வசதியாக மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று தங்களின் ராஜினாமாவை வாபஸ் பெற்றதாக அந்த அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
தெலுங்கானாவை தனி மாநிலமாக மத்திய மாற்றும் என கடந்த 9ம் தேதி அறிவித்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், மற்ற பகுதிகளில் எழுந்த எதிர்ப்பை கண்டு மிரண்டு தெலுங்கானாவை பிரிப்பது குறித்து உட்கார்ந்து பேசிக்கொள்ளலாம் என 'ஜகா' வாங்கினார்.
இதன் விளைவாக தெலுங்கானாவின் 10 மாவட்டங்களிலும் வன்முறை கொழுந்துவிட்டு எரிந்து, தற்போது அப்பகுதி முழுவதும் காலவரையற்ற பந்த் அறிவிக்கப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மத்திய அரசு தெலுங்கானா விவகாரத்தில் தெளிவான முடிவை அறிவிக்கும் வரை அமைச்சரவைப் பணிகளில் ஈடுபடமாட்டோம் எனக் கூறி ஆந்திர அமைச்சர்கள் 13 பேர் கடந்த 23ம் தேதி தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இப்பரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆந்திராவின் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, சி.பி.ஐ, சி.பி.எம், டி.ஆர்.எஸ், பிரஜா ராஜ்ஜியம், தெலுங்கு தேசம், எம்.ஐ.எம் ஆகிய எட்டு கட்சிகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், ஆந்திர அமைச்சர்கள் தங்கள் ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்துள்ளனர். இதுகுறித்து மாநில தகவல் துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான கீதா ரெட்டி கூறுகையில்,
பிரச்னையை தீர்க்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எங்களுக்கு திருப்திகரமாக அமைந்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு ஏற்ற சுமூக சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்துள்ளோம்' என்றார்.
இதற்கிடையே, மத்திய அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சி பேச்சுவார்த்தை கூட்டத்தில் தனி தெலுங்கானா போராட்டத்துக்காக ஏற்படுத்தப்பட்ட அனைத்துக்கட்சி குழு மற்றும் டி.ஆர்.எஸ் ஆகியவையும் தயாராக இருப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications