குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்தம் அமல்!
டெல்லி: குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம் டிசம்பர் 31ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த சட்டத் திருத்தம் மூலம் கற்பழிப்பால் பாதிக்கப்படுபவர்களுக்கு கூடுதல் உரிமைகள் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. கோர்ட் அனுமதியுடன், தங்களது தரப்பில் வாதிடுவதற்கு பாதிக்கப்பட்டவர்களே வக்கீல் வைத்துக் கொள்ளலாம்.
மேலும், பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவரிடம் அவரது வீட்டில், இயன்ற வரையில் ஒரு பெண் காவல் துறை அதிகாரி, பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது சமூக சேவகரின் முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும்.
இந்த வாக்குமூலங்களை மின்னணு முறையில் ஒலி-ஒளி பதிவு செய்யப்பட வேண்டும். சட்டப்பிரிவு 376 முதல் 376-டி யின் கீழ் வரும் குற்றங்கள் தொடர்பான விசாரணை கூடுமான வரையில் 2 மாத காலங்களுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் ( திருத்தம்) 2008 என்ற பெயரிலான இந்த சட்டத்தில், குற்றவியல் நீதி வழங்கல் முறையில் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் அரசு தரப்புக்கு உதவவும், மேல் முறையீடு செய்யவும் ஒரு வழக்கறிஞரை நியமித்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார். சட்டப்பிரிவு 376, 376 ஏ முதல் 376 டி வரையிலான குற்றங்கள் பெண் நீதிபதியைக் கொண்ட நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும்.
ஒரு பெண் கைது செய்யப்படும் பட்சத்தில் இந்த நடைமுறை கைவிடப்படும். கைது செய்யப்பட்டவுடன் அந்த நபர் மருத்துவரால் உடனடியாக பரிசோதிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்ற நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர் அல்லது அவரை சார்ந்திருப்பவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக மாநில அரசு புதிய திட்டமொன்றை உருவாக்கும் வகையில் 357 ஏ என்ற புதிய பிரிவு சேர்க்கப்படுகிறது. இவை தவிர மேலும் சில திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய சட்டத் திருத்தத்தின்படி, கைது செய்யும் காவல்துறை அதிகாரிகள் அவர்களின் பெயர்கள் உள்ளிட்ட அடையாளம் அடங்கிய பேட்ஜை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். கைது செய்யப்பட்டது, அதற்குரிய சாட்சி ஆகியவற்றைக் குறிப்பிட்டு கையெழுத்துப் பெற வேண்டும்.
தாங்கள் கைது செய்யப்பட்டதை குடும்பத்தினருக்கோ, உறவினருக்கோ, நண்பர்களுக்கோ தெரிவிக்கும் உரிமை கைது செய்யப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகளை மாநில அரசுகள் கண்டிப்பாக உருவாக்க வேண்டும். கட்டுப்பாட்டு அறைகளுக்கு வெளியே நோட்டீஸ் போர்டு ஒன்று இடம் பெற வேண்டும். அதில், கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள், அவர்களைக் கைது செய்த அதிகாரியின் பெயர், பதவி உள்ளிட்டவை இடம் பெறச் செய்ய வேண்டும்.
சட்ட ஆணையம், நீதிபதி மலிமத் கமிட்டியின் அறிக்கை ஆகியவற்றின் பரிந்துரைகள், உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்த சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சட்டத் திருத்தங்களில் சிலவற்றுக்கு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
குறிப்பாக, பிரிவு 5, 6 மற்றும் 21 பி ஆகியவற்றை எதிர்த்து வக்கீல்கள் போராடி வந்தனர். இவை போலீஸார் கைது செய்ததற்கான அதிகாரம், விசாரணையை தள்ளி வைப்பது அல்லது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்த நீதிமன்ற அதிகாரம் தொடர்பானவையாகும்.
இதுபற்றி எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டதால் இது மத்திய சட்ட ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்ட ஆணையம் ஆலோசித்து தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த அறிக்கை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications