தமிழ்நாட்டை பிரிக்க கோருவது அபத்தம்-ப.சிதம்பரம்
சென்னை: தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என்பது அபத்தமான, அர்த்தமற்ற கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
முதல்வர் கருணாநிதியை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய பின் நிருபர்களிடம் பேசிய அவர்,
முதல்வருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்ல வந்தேன். தனி தெலுங்கானா பிரச்சனையில் வரும் 5ம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடக்கிறது. இதில் ஆந்திராவின் 8 அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்திருக்கிறோம். அந்தக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
தெலுங்கானா விஷயத்தில் நாங்கள் அவசர முடிவேதும் எடுக்கவில்லை. டிசம்பர் 7ம் தேதி அனைத்து கட்சித் தலைவர்களும் கூடி ஒரு முடிவை எடுத்தார்கள். அந்த முடிவைத் தான் டிசம்பர் 9ம் தேதி அறிவித்திருந்தோம். அதை அறிவித்த பின் காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளுக்குள் பிளவு ஏற்பட்டிருக்கிறது. சமரசம் ஏற்படுத்த முயற்சி எடுத்தோம், முடியவில்லை. அதனால் தான் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மீண்டும் கலந்தாலோசிக்க முடிவெடுத்திருக்கிறோம்.
தெலுங்கானா விஷயத்தில் மத்திய அரசுக்கென தனிப்பட்ட கருத்து ஏதும் இல்லை. ஆந்திர மக்களின் கருத்தை அனுசரித்து தான் மத்திய அரசு முடிவை எடுக்கும்.
தமிழை தேசிய ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பது நீண்டகாலமாக இருக்கும் பிரச்சனை. உடனடியாக இதில் பதில் சொல்ல முடியாது.
தமிழ்நாட்டையும் பிரிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது அபத்தமான, அர்த்தமற்ற கோரிக்கை. இது முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய ஒன்று என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications