பென்னாகரம் பாமக வேட்பாளர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன்!

இத் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பெரியண்ணனின் மறைவையடுத்து இங்கு இடைத் தேர்தல் நடக்கிறது.
ஜனவரி 20ம் தேதி அறிவிக்கப்பட்ட தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டாலும் பாமக எம்எல்ஏக்கள், மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பென்னாகரத்தில் தீவிரமாக தேர்தல் பணியை ஆரம்பித்துவிட்டனர்.
இந் நிலையில் திண்டிவனத்தில் நடந்த கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் இத் தொகுதிக்கான வேட்பாளராக தமிழ்க்குமரனை அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமக தலைவர் ஜி.கே.மணியின் மகனான இவர் பி.இ, எம்.பி.ஏ. படித்தவர். பென்னாகரத்தில் பிறந்து வளர்ந்த இவர் இப்போது மேட்டூரில் வசித்து வருகிறார். மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
1996 மற்றும் 2001 பேரவைத் தேர்தல்களில் பென்னாகரம் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு ஜி.கே.மணி வெற்றி பெற்றார்.
கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டதோடு, தேர்தல் நேரங்களில் தந்தையுடன் தேர்தல் வேலைகளைச் செய்துள்ளார் தமிழ்க்குமரன்.
முன்னதாக பாமக பொதுக்குழுக் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. அதில் பேசிய ராமதாஸ்,
திருமங்கலம் இடைத் தேர்தலில் திமுகவின் பார்முலா என்னவென்று உங்களுக்குத் தெரியும். பென்னாகரத்தில் பாமகவின் பார்முலாவை நீங்கள் காண்பீர்கள். இந்தத் தொகுதியில் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வெற்றி பெறும் என்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், பென்னாகரம் தொகுதியில் 1991, 1996, 2001 என கடந்த 3 தேர்தல்களிலும் திமுக 3வது இடத்தை தான் பிடித்தது. எனவே பென்னாகரம் தொகுதியில் பாமகவின் வெற்றி உறுதியானது.
பென்னாகரம் இடைத் தேர்தலில் மகளிர் அணியினர் சிறப்பாக செயல்பட்டு கட்சி்க்கு வெற்றியைத் தேடித்தர வேண்டும். மற்ற நிர்வாகிகள் அனைவரும் அங்கு தேர்தல் தேதி அறிவிக்கும் வரை பம்பரமாக சுழன்று வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
ஆளும் கட்சியில் உள்ளவர்கள் பலர் பாமக ஒழிந்து விட்டது, இனி தலைநிமிராது என்று கூறுகிறார்கள். ஆனால் முதல்வர் கருணாநிதி மட்டும் அப்படி கூறவில்லை. ஏனென்றால் தேர்தலில் இதுபோன்ற பல தோல்விகளை சந்தித்தவர் அவர்.
1991ல் ஒரே ஒரு இடத்தில் திமுகவும், பாமக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. 1997ல் அதிமுக 2 இடங்களிலும் பாமக 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது.
மேற்கண்ட தோல்விகளினால் திமுகவும், அதிமுகவும் காணாமல் போய் விட்டதா? பாமகவை ஓரம் கட்ட முடியாது என்பதை பென்னாகரம் தேர்தல் மூலமாக மற்ற கட்சிகள் புரிந்துகொள்ளும்.
கடந்த தேர்தலில் திமுகவும் அதிமுகவும் மறைமுகமாக பேசிக்கொண்டு பாமகவை தோற்கடித்தனர்.
காரல் மார்க்ஸ், அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் பாமக தோல்வி அடைந்து விட்டால் இந்த தலைவர்களின் கொள்கைகள் தோல்வி அடைந்ததாக அர்த்தம். மேலும் ஜனநாயகம், சமூக நீதி உள்பட அனைத்தும் தோற்று விட்டதாக அர்த்தம்.
பாமக சார்பில் 25 இயக்கங்களை மொழிக்காகவும், இசைக்காகவும், பண்பாட்டிற்காகவும் உருவாக்கி இருக்கிறேன். ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். என்னுடன் பல போராட்டங்களில் சிறைவாசம் அனுபவித்தவர்களை 'ஜெயில்மேட்' என கூறுவேன்.
இந்த புத்தாண்டில் 2 காரணங்களுக்காக போராட்டம் நடத்தப்படும். ஒன்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கு ஏற்பட வேண்டும் என பெண்கள் மற்றும் ஆண்களும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவது. மற்றொன்று சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி போராட்டம் நடத்துவது என்று பாமக முடிவு செய்துள்ளது என்றார் ராமதாஸ்.
பென்னாகரம் தொகுதிக்கு திமுகவும் தனது வேட்பாளரை அறிவித்துவிட்ட நிலையி்ல் முக்கிய எதிர்க் கட்சியான அதிமுக மற்றும் தேமுதிக ஆகியவை வேட்பாளர்களை இன்னும் அறிவிக்கவில்லை.
இந் நிலையில், பெண்ணாகரம் இடைத் தேர்தல் பணிகளை நேரில் ஆய்வு செய்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், இடைத் தேர்தல் தேதியை மத்திய தேர்தல் கமிஷன் தான், முடிவு செய்யும் என்றார்.
இந்தத் தொகுதியில் பிப்ரவரியில் தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications