அழகிரி பெயரில் பேரவை- கட்சியினருக்கு திமுக எச்சரிக்கை
சென்னை: மத்திய அமைசசர் மு.க.அழகிரி பெயரில் அமைக்கப்பட்டுள்ள பேரவையுடன் திமுகவினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று திமுக தலைமைக் கழகம் எச்சரித்துள்ளது.
ரிஷியவந்தியம் தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ மரூர் தர்மலிங்கம் என்பவர் அகில இந்திய மு.க.அழகிரி பேரவை என்ற பெயரில் அமைப்பு ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
அழகிரியை பிரதமராக்குவோம், ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று இந்த பேரவை உறுதி பூண்டுள்ளது. இணையதளம் ஒன்றையும் தொடங்கவும் தர்மலிங்கம் திட்டமிட்டுள்ளார்.
திமுகவினர் மத்தியில் இந்தப் பேரவை அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தி.மு.க. தலைமைக் கழகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,
மரூர்.தர்மலிங்கம் என்பவர் அகில இந்திய மு.க.அழகிரி பேரவை என்ற பெயரில் ஒரு அமைப்பினை உருவாக்கி, மாநில அளவில் நிர்வாகிகளை நியமித்து வருவதாக தலைமைக் கழகத்திற்கு தகவல்கள் வந்துள்ளன.
இதுபோன்ற கட்சி சட்டதிட்டங்களுக்கு முரணான, ஆதாயம் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்களோடு கட்சி தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும், அப்படி தொடர்பு வைத்துக்கொண்டால் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications