டெல்லி- விமான போக்குவரத்து சகஜமானது - காஷ்மீருக்கு ரத்து
டெல்லி: டெல்லியில் பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்ட விமான சேவைகள் இன்று சகஜ நிலைக்கு திரும்பின. எனினும், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டெல்லி விமான நிலையத்தில் கடும் பனி மூட்டத்தால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக நேற்று உள்நாட்டு விமான போக்குவரத்து கடுமையாக பாதித்தது.
சுமார் 45 புறப்பாடுகளும் 25 வருகைகளும் ஐந்து மணி நேரம் வரை தாமதமாயின. அடர்த்தியான பனிப்பொழிவு மற்றும் அதனால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் 17 சர்வதேச விமானங்கள் வேறு மார்க்கத்தில் திருப்பிவிடப்பட்டன.
நேற்று நள்ளிரவு வரை இதேநிலைமை நீடித்ததாகவும், இன்று காலை முதல் வானம் தெளிவடைந்து தற்போது விமான போக்குவரத்து சகஜ நிலையில் இயங்கிக் கொண்டிருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், அமிர்தசரஸ், லே, ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் மோசமான வானிலை நிலவுவதால், டெல்லியில் இருந்து அப்பகுதிகளுக்கு செல்லும் 6 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அதிகாலையில் புறப்பட்ட சில விமானங்கள் தாமதமாக சென்றன.
டெல்லியில் வெப்பநிலை இன்று குறைந்தபட்சம் 9.5 டிகிரி செல்ஷியசும், அதிகபட்சமாக 15 டிகிரி வரை செல்லும் என்றும் வானிலை ஆய்வு மையத்தகவல் தெரிவிக்கிறது.
விமான ஓடுதளத்தில் நேற்று 150 மீட்டருக்கு அப்பால் எதுவும் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்தது. தற்போது 2,000 மீட்டர் வரை தெளிவாக காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் போக்குவரத்தும் பாதிப்பு
கடும் பனிப்பொழிவு காரணமாக 13 எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டெல்லி-ஜலந்தர் எக்ஸ்பிரஸ், சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ், ஷான்-இ-பஞ்சாப் எக்ஸ்பிரஸ், கோமதி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 13 ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்று இரவு காணப்பட்ட கடுமையான பனிப்பொழிவால் இன்று டெல்லியை வந்தடையும் 49 ரயில்கள் தாமதமாக வந்தன. இதன் காரணமாகவும் சில ரயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications