கொங்குநாடு தனி மாநிலக் கோரிக்கை வலுக்கும்- பெஸ்ட் ராமசாமி
கோவை: மத்திய, மாநில அரசுகள் கொங்கு மண்டலத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தால் தனி மாநிலக் கோரிக்கை மேலும் வலுக்கும் என்று கொங்கு நாடு முன்னேற்றக் கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்குநாட்டை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பதல்ல எங்கள் கோரிக்கை. இதனை புரிந்துகொள்பவர்களின் எண்ணத்தில்தான் குற்றம் உள்ளது.
எந்தக் காலத்திலும் இந்திய தேசத்தின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் உறுதியாக உள்ளது.
பாரதத்தில் உள்ள எந்த ஒரு குடிமக்களையும் நாங்கள் பிரித்து பார்ப்பதில்லை. இதற்கு உதாரணமாக இப்போது கொங்கு நாட்டிற்கு பல்வேறு மாநிலங்களில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் வேலைவாய்ப்பு தேடி வருகிறார்கள்.
அவர்களை அரவணைத்து நல்ல வேலை வாய்ப்புகளையும், பாதுகாப்பையும் தந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசின்கீழ் மற்ற மாநிலங்களில் உள்ளது போல் கொங்குநாட்டையும் நிர்வாக வசதிக்காக பிரித்து தாருங்கள் என்றுதான் கேட்கிறோம்.
கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சமுதாயத்தை சேர்ந்த மக்களின் அயராது உழைப்பினால் தமிழக அரசுக்கு 48 சதவீதம் வரி கிடைக்கின்றது.
ஆனாலும், கொங்குநாட்டை தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசும், மாநில அரசும் பாராமுகமாக உள்ளது. கொங்கு மண்டலத்தில் எந்த ஒரு அடிப்படை வசதிகளோ, கட்டமைப்பு வசதிகளோ முறையாக இல்லை.
கொங்குநாட்டிற்கு என்று தனி அரசு இருந்திருந்தால் தற்போது உள்ள சாய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டு இருப்போம். இந்த அளவு பெரியஅளவில் வெடித்திருக்காது.
இந்த சாயப்பட்டறை பிரச்சனையால், பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தீர்வுகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணிக்குமானால் எங்களது கொங்குநாடு தனிமாநில கோரிக்கை பன்மடங்காக வலுப்பெறும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications